120 அடி ஆழ்துளை கிணறு.. தவறி விழுந்த 3 வயது சிறுவன்.. தெலுங்கானாவில் பரபரப்பு.. மீட்பு பணி தீவிரம்!
ஹைதராபாத்: தெலங்கானாவில் 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சாய் வர்தனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
Recommended Video
தெலுங்கானாவில் உள்ள பப்பன்னாபேட் மண்டல் என்று பகுதியில் 3 வயது சிறுவன் சாய் வர்தன் ஆழ்துளை கிணறு ஒன்றில் விழுந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாய் வர்தன் தனது வீட்டின் பின் பக்கத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார்.
சாய் வர்தனின் அப்பா கோவர்தன் விவசாயி. இவரின் மொத்த குடும்பமும் விவசாய குடும்பம் ஆகும். இவர் தனது வீட்டின் பின் பக்கத்தில் விவசாய தேவைக்காக ஆழ்துளை கிணறுகளை தோண்டி இருக்கிறார்.
விவசாய தேவை
தனது வீட்டின் பின் பக்கத்தில் மொத்தம் மூன்று ஆழ்துளை கிணறுகளை அவர் தோண்டியுள்ளார். அருகருகே இந்த கிணறுகள் தோண்டப்பட்டு இருக்கிறது. அந்த இடத்தில்தான் சாய் வர்தன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளான். ஆனால் ஆழ்துளை கிணறுகள் மூன்றிலும் அங்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் அந்த ஆழ்துளை கிணறுகளை மூடும் பணியில் சாய் வர்தனின் அப்பா கோவர்தன் ஈடுப்பட்டு உள்ளார்.
மூடும் பணி
ஒவ்வொரு கிணறுகளாக அங்கு மூடப்பட்டு வந்தது. அப்போது சாய் வர்தன் அங்கு விளையாடிக் கொண்டு இருந்துள்ளான். அங்கு விளையாடிக் கொண்டு இருந்த சிறுவன் சாய் வர்தன் ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்துள்ளார். இரண்டாவது கிணற்றில் தவறி அந்த சிறுவன் விழுந்து இருக்கிறான். அந்த கிணறு 120 அடி ஆழம் கொண்டது.
எப்போது நடந்தது
இந்த சம்பவம் இன்று மாலை 4.30 மணிக்கு நடந்து இருக்கிறது. இதையடுத்து உடனடியாக மீட்பு படையினருக்கு சாய் வர்தன் அப்பா தகவல் கொடுத்துள்ளார். அங்கு தீயணைப்பு படையினர் உடனடியாக வந்துள்ளனர். தற்போது அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அங்கு உள்ளது, அதேபோல் மாநில பேரிடர் மீட்பு படையினர் அங்கு மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள்.
சுஜித் சம்பவம்
இதேபோல்தான் கடந்த வருடம் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தார். இவரை மீட்கும் பணிகள் நான்கு நாட்களாக நடந்து வந்தது. ஆனால் 80 மணி நேர போராட்டம் தோல்வியில் முடிந்து கடைசியில் சுஜித் சடலமாக மீட்கப்பட்டார். சுஜித்திற்கு பிறகு தற்போது இன்னொரு சம்பவம் இதேபோல் தெலுங்கானாவில் நடந்துள்ளது.