ஆட்டோவில் கடத்தி பி பார்ம் மாணவி கூட்டு பலாத்காரம்.. கஞ்சா அடித்த டிரைவர் உள்பட 4 பேர் கைது
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் மருந்தாளுநர் பட்டப்படிப்பு (பி பார்ம்) படிக்கும் கல்லூரி மாணவி கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
தெலுங்கானாவில் கண்ட்லகோயாவில் உள்ள தனியார் கல்லூரியில் பி பார்ம் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார் 20 வயது மாணவி. இவர் கல்லூரியில் இருந்து நேற்று முன் தினம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
வழக்கமாக ஆட்டோவில் வீடு திரும்பும் அந்த மாணவி, சம்பவத்தன்றும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த ஆட்டோ ஓட்டுநர் கஞ்சா அடித்துவிட்டு போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
நிறுத்தங்கள்
அந்த மாணவி ஏறிய ஆட்டோவில் 3 பயணிகள் இருந்ததும் அவர்கள் தங்கள் நிறுத்தங்கள் வந்ததும் இறங்கியதும் தெரியவந்தது. இந்த நிலையில் ஆட்டோவை வேறு ஒரு பக்கம் திருப்பியுள்ளார் டிரைவர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, நான் செல்லும் வழி இதுவல்ல என கூறியுள்ளார்.
ஆட்டோ டிரைவர்
ஆனாலும் அந்த டிரைவர் கேட்காமல் வேகமாக சென்றுள்ளார். இறக்கிவிடுமாறு கூறியும் அந்த டிரைவர் கேட்கவில்லை. இதனிடையே ஆட்டோ டிரைவரின் செயல்பாடுகள் குறித்து அந்த மாணவி தனது தாயாருக்கு புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் ஆட்டோவை வேறு ஒரு கிராமத்திற்கு ஓட்டிச் சென்ற ஆட்டோ டிரைவர், அங்கிருந்த வேனில் மாணவியை கடத்திச் சென்றார்.
4 பேரும் சேர்ந்து
அந்த வேனில் ஏற்கெனவே 3 பேர் இருந்தனர். இவர்கள் 4 பேரும் சேர்ந்து அந்த மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு அவரை கீசாரா காவல் எல்லைக்குள்பட்ட ஜோடிமெட்லா சாலையில் சுயநினைவற்ற நிலையில் இறக்கிவிட்டுள்ளனர். பின்னர் சாலையில் வருவோரிடம் அந்த மாணவி உதவி கேட்டுள்ளார். இதையடுத்து மாணவியின் நிலை குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனை
இதனிடையே மாணவியின் தாயும் போலீஸாருக்கு புகார் அளித்திருந்தார். மாணவியின் செல்போன் சிக்னலை வைத்து ஜோடிமெட்லா சாலையில் இருப்பவர் அந்த மாணவிதான் என்பதை போலீஸார் தெரிந்து கொண்டனர். இதையடுத்து அவரை மீட்ட போலீஸார் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
4 பேரில் ஒருவர்
சிசிடிவி காட்சிகளை வைத்து கடத்திய ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேரை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் ராஜூ, சிவா, பாஸ்கர், நாதன் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அந்த 4 பேரில் ஒருவர் நன்கு தெரிந்தவர் என கூறப்படுகிறது.