கண் முன் தீவைத்து எரிக்கப்பட்ட 4 குட்டிகள்.. கதறி தவித்த தாய் நாய்.. ஹைதராபாத்தில் பரிதாபம்!
4 நாய்க்குட்டிகள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டன.
ஹைதராபாத்: இப்போதைக்கு ஹைதராபாத்தில் நிலவி வரும் வயித்தெறிச்சல் சம்பவம் இதுவாகத்தான் இருக்க முடியும்.
கடந்த சனிக்கிழமையன்று 4 நாய்க்குட்டிகள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டன. இப்படி ஒரு கொடூரமான விஷயத்தை செய்தது யார் என தெரியவில்லை. ஆனால் பெற்ற தாயின் கண்முன்னே இந்த 4 குட்டிகளும் உயிரோடு எரிகின்றன.
கண்ணீர் விட்டு அழுதது
அதை பார்த்து தாய் நாய் என்ன செய்வதென்று தெரியாமல் இங்குமங்கும் ஓடுகிறது.. பதறுகிறது.. துடிக்கிறது.. கொளுத்து விட்டு எரியும் தீயை கண்டு நடுங்குகிறது.. பதட்டமாகிறது.. பரிதவிக்கிறது... கடைசியில் நாய்க்குட்டிகள் கருகி போன நிலைக்கு வரும்போது, வேற வழியே தெரியாமல் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு கண்ணீர் விட்டு அழ தொடங்கி விட்டது.
போராடிய குட்டி
சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். தீயில் போராடி கொண்டிருந்த குட்டிகளை காப்பாற்ற முயன்றனர். 3 குட்டிகள் நெருப்பிலேயே வெந்து கருகிவிட்டன. ஒரே ஒரு குட்டிக்கு மட்டும் உயிர் இழுத்துகொண்டு இருந்தது. அதனால் அதை தூக்கி கொண்டு விலங்குநல மருத்துவரிடம் ஓடினார்கள். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே அந்த குட்டியும் இறந்துவிட்டது.
தாய் நாய் கதறியது
இதையடுத்து பொதுமக்கள் உடனடியாக போலீசிலும் புகார் தந்தனர். விரைந்து வந்த அவர்கள், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, இப்படி ஒரு பாவத்தை செய்தவர்கள் யார் என கண்டுபிடிக்க முடிவு செய்துள்ளார்கள். நாய்க்குட்டிகள் எரிவதும், தாய் நாய் கதறுவதும் வீடியோவாகவும், போட்டோவாகவும் வெளியிடப்பட்டன.
மனித மிருகங்கள்
இதை பார்த்த ஒவ்வொருவரும் கண்ணீர் வடித்து வருகின்றனர். தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். மனிதர்களின் இந்த மிருக செயலினால் கண்ணீரை விட்டபடியே இருக்கும் தாய் நாய்க்கு இனி யாராலும் பதிலே சொல்ல முடியாது!!