தடுப்பூசி போட்டுக்கொண்ட சில மணி நேரத்தில் உயிரிழப்பு.. தடுப்பூசி காரணம் இல்லையாம்.. விசாரணை தீவிரம்
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட சில மணி நேரத்திலேயே சுகாதார ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 16ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளைத் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக நாடு முழுவதும் உள்ள ஒரு கோடி சுகாதார ஊழியர்களுக்கும் இரண்டு கோடி முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது நாட்டிலுள்ள சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட சில மணி நேரத்திலேயே சுகாதார ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 42 வயதான அந்த சுகாதாரப் பணியாளருக்கு நேற்று காலை 11.30 மணிக்கு நிர்மல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 2.30 மணிக்கு அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அதிகாலை 5.30 மணிக்கு அவரை மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது அவர் உயிரிழந்திருந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் 19 தடுப்பூசிகள் தவிர்க்க முடியாதவை!.. அறிவுறுத்தும் டாக்டர் முத்துச் செல்லக்குமார்
முதல்கட்ட விசாரணையில், அவரது உயிரிழப்பிற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும், இது தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, விரைவில் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட சிறப்புக் குழு, இந்த உயிரிழப்பை ஆராய்ந்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.