லொள்.. லொள்... 50 நாய்கள் கொன்று புதைப்பு.. மாநகராட்சி ஆணையர் மீது பாய்ந்தது வழக்கு
ஐதராபாத்: தெலங்கானாவில் சுமார் 50 தெருநாய்களை கொன்று புதைத்ததாக மாநகராட்சி ஆணையர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
தெலங்கானாவில், பல இடங்களில், தெரு நாய்களின் அட்டகாசம் மக்களை அச்சப்பட வைத்துள்ளது.வாகன ஓட்டிகள் வேகமாக சென்று, நாய்கள் மீது மோதி விபத்துக்குள்ளாவதும் அன்றாடம் அரங்கேறி வருகிறது.
தெரு நாய் பிரச்சனை குறித்து, அடிக்கடி, சர்ச்சை எழும்போது, அதிகாரிகள், விலங்குகள் நல அமைப்பை கை காட்டி, மவுனம் காப்பது வழக்கமாக உள்ளது. தெரு நாய்களை கட்டுப்படுத்த, பல மாநகராட்சிகளில், நாய்களுக்கான கருத்தடை ஆப்பரேஷன் தியேட்டர்கள் அமைக்கப்பட்டன.
ஆனால், பெயரளவுக்கு நாய்களுக்கு கருத்தடை செய்ததோடு சரி. பல இடங்களில் இதில் முறைகேடுகளும் நடந்தன. இதனால், நாய்கள் தற்போது பெருகிவிட்டன. என்றேல்லாம் புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து, தெலங்கானாவில் சுமார் 50 தெருநாய்களை விஷ ஊசி போட்டும், பழைய முறைப்படி சுருக்கு வலை போட்டும், கொன்று, குப்பை லாரிகளில் கொண்டுச் சென்றதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து, தெலங்கானா மாநிலம் விக்ராபாத்தை சேர்ந்த ஒருவர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், 50க்கு மேற்பட்ட தெருநாய்களை மாநகராட்சி நிர்வாகம் கொன்றதோடு, அங்குள்ள குப்பை கிடங்கில் புதைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து குப்பை கிடங்கை போலீசார் தோண்டியபோது, சில நாய்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் அங்கு நின்றிருந்த லாரியின் பின்பகுதியிலும் சில நாய்களின் சடலங்களும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அவற்றை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கால்நடை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சுமார் 50 நாய்களை கொன்று புதைத்ததாக மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.