முத்தி போச்சு.. திடீரென பிளேடை எடுத்து.. நாக்கை வெட்டி.. தெலுங்கானாவில் அரசியல் அக்கப்போர்
நாக்கை வெட்டி கோயில் உண்டியலில் ஒரு தொண்டர் காணிக்கையாக செலுத்தினார்.
ஹைதராபாத்: அது வேற ஒன்னும் இல்லை... பக்தி முத்தி போயிடுச்சுன்னா இப்படி சில சமயம் நடக்கும்!! ஆனா அது யார் மேல இருக்கிற பக்தின்னுதான் தெரியல!!
தெலுங்கானாவில் நாளையும், 11-ம் தேதியும் தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக ஒட்டுமொத்த மாநிலமே பரபரப்பாக உள்ளது.
இந்த நிலையில், ஆந்திரபிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் மகேஷ். 35 வயதாகிறது. இவர் தன் கட்சி தலைவர் வரும் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று கோயிலுக்கு சென்று பலமுறை சாமி தரிசனம் செய்துள்ளார். அதோடு நிற்காமல் ஒரு வேண்டுதலையும் செய்ய முடிவெடுத்தார்.
உண்டியலில் காணிக்கை
அதன்படி மகேஷ் ஹைதராபாத்தின் ஸ்ரீநகர் காலனியில் உள்ள கோவிலுக்கு சென்றார். அங்கே சாமி கும்பிட்டவர் திடீரென பாக்கெட்டிலிருந்து ஒரு பிளேடை எடுத்து தன் நாக்கை வெட்டி படார் என அங்கிருந்த உண்டியலில் காணிக்கையாக போட்டார்.
ரத்தம் கொட்டியது
மகேஷூடன் நின்று கொண்டு சாமி கும்பிட்ட மற்ற பக்தர்கள் இதை பார்த்து அலறியடித்து ஓடினார்கள். வாயிலிருந்து ரத்தம் பொலபொலவென கொட்டியது. ஒருசிலர் ஓடிச்சென்று மகேஷை காப்பாற்ற முயன்றனர். அப்போது அவரது கையில் ஒரு வேண்டுதல் லட்டரும் இருந்தது.
வேண்டுதல் கடிதம்
அதில், தெலுங்கானா மற்றும் ஆந்திராவுக்கு, தான் விரும்புபவர்கள் முதல்வர்களாக வேண்டும் என்றும், தனக்கு ஆந்திர பிரதேச அமைச்சரவையில் சட்டமன்ற உறுப்பினர் பதவி கிடைக்க வேண்டும் என்றும் காணிக்கை செலுத்துவதாக எழுதி அந்த லட்டரை கையோடு மகேஷ் கொண்டு வந்திருக்கிறார்.
போலீசார் விசாரணை
கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கோயிலுக்குள்ளேயே மகேஷ் மயங்கி விழுந்தார். உடனே அருகிலிருந்த ஆஸ்பத்திரிக்கு அவரை தூக்கி கொண்டு ஓடினார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தன் தலைவனுக்காக நாக்கை வெட்டி காணிக்கையாக போட்ட இந்த சம்பவம் குறித்து பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
முத்தி போச்சு
தன்னுடைய தானை தலைவர் வெற்றி பெற, பொதுவாக தொண்டர்கள் தீச்சட்டி தூக்குவார்கள், காவடி எடுப்பார்கள், மண் சோறு சாப்பிடுவார்கள். இப்போது இதெல்லாம் தாண்டி உடல் உறுப்புகளை அறுத்து காணிக்கை தரும் அளவுக்கு "முத்தி" போய் விட்டது... பக்திதான்!