இல்லை.. ரோஜாவுக்கு துணை முதல்வர் பதவி இல்லை.. சபாநாயகர் பதவிக்கு வாய்ப்பு?
Recommended Video
ஹைதராபாத்: ஆந்திராவின் அமைச்சர்கள் இன்று பதவியேற்ற நிலையில் நடிகை ரோஜாவுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை. மாறாக அவருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலும் சட்டசபை தேர்தலும் ஒன்றாக நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற இந்த தேர்தலின் முடிவுகள் கடந்த மே மாதம் 23ஆம் தேதி வெளியானது.
இதில் இரு தேர்தல்களிலும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது. 175 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 150க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றினார் ஜெகன் மோகன் ரெட்டி.
கடந்த 30ல் பதவியேற்பு
ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 30ஆம் தேதி அம்மாநில முதல்வராக பதவியேற்றார். முதல்வராக பதவியேற்ற நாள் முதலே அதிரடிக் காட்டி வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி.
5 துணை முதல்வர்கள்
இந்நிலையில் நாட்டிலேயே முதல்முறையாக ஆந்திர மாநிலத்தில் 5 துணை முதல்வர்களை நியமிக்க அவர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. 5 துணை முதல்வர்களும் ஒவ்வொரு சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என கூறப்பட்டது.
ரோஜா துணை முதல்வர்?
அவர்கள் 5 பேரும் இன்று பதவியேற்றனர். இந்நிலையில் 5 துணை முதல்வர்களில் ஒருவராக நடிகையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவுமான ரோஜா பதவியேற்பார் என தகவல் வெளியானது
நடிகை ரோஜாவும் பதவியேற்பு?
இன்று காலை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் துணை முதல்வர்கள், அமைச்சர்கள் என 25 பேர் பதவியேற்றனர். அவர்களில் ஒருவராக நடிகை ரோஜாவும் துணை முதல்வராக பதவியேற்பார் என கூறப்பட்டது. ஆனால் பதவியேற்ற அமைச்சர்களின் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.
தமிழகத்தின் மருமகள்
இதனால் ரோஜா தரப்பு அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரோஜாவுக்கு சபாநாயகர் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகை ரோஜா இயக்குநர் ஆர்கே செல்வமணியின் மனைவி மற்றும் தமிழகத்தின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது.