ஒரே கையெழுத்து.. 4 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்த ஜெகன் மோகன்.. ஆந்திராவின் சிவாஜி தி பாஸ்!
ஆந்திர பிரதேசத்தில் வரும் அக்டோபர் மாதத்திற்குள் 4 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் வகையில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சட்டம் இயற்றி இருக்கிறார்.
Recommended Video
ஹைதராபாத்: ஆந்திர பிரதேசத்தில் வரும் அக்டோபர் மாதத்திற்குள் 4 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் வகையில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சட்டம் இயற்றி இருக்கிறார்.
ஆந்திர பிரதேசத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்றதில் இருந்தே அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நிறைய நல்ல சட்டங்களை கொண்டு வருகிறார். தேர்தலின் போது தான் கொடுத்த வாக்குறுதிகளை வரிசையாக நிறைவேற்றி வருகிறார்.
நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் அந்த மாநிலம் தற்போது புதிய வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறது. முக்கியமாக இளைஞர்களுக்கு அரசு வேலை அளிக்க ஜெகன் அதிக முயற்சி எடுத்து வருகிறார்.
பாத யாத்திரை
சட்டசபை தேர்தலுக்கு முன் அம்மாநிலம் முழுக்க ஜெகன் பாத யாத்திரை சென்றார். அவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கூட இந்த யாத்திரைதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாத யாத்திரையில், ஜெகன் மோகனிடம் பல இளைஞர்கள் அரசு வேலை வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள். இளைஞர்கள் பலரின் கோரிக்கையாக வேலை வாய்ப்பு இருந்துள்ளது.
என்ன செய்தார்
அப்போதே இந்த கோரிக்கையை ஆட்சிக்கு வந்த பின் நிறைவேற்றி தருவேன் என்று ஜெகன் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று அம்மாநில சட்டசபையில் ஆந்திர பிரதேச உள்ளூர் இளைஞர்களுக்கான அரசு -தனியார் வேலைவாய்ப்பு சட்டத்தை (Andhra Pradesh Employment of Local Candidates in Industries/Factories Act, 2019) வெற்றிகரமாக தாக்கல் செய்து நடைமுறைக்கு கொண்டு வந்தார்.
என்ன திட்டம்
இதன்படி அரசு மற்றும் அரசு - தனியார் இணைந்து செயல்படும் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை அளிக்கப்படும். திறமை இருப்பவர்கள் நேரடியாக எடுக்கப்படுவார்கள். திறமை இல்லாதவர்கள் பயிற்சி வழங்கி வேலைக்கு எடுக்கப்படுவார்கள். இதன் மூலம் அக்டோபர் முதல் வாரத்தோடு ஆந்திர பிரதேசத்தில் 4 லட்சம் கிராமப்புற இளைஞர்கள் வேலையில் சேர்வார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.
அரசு வேலை
அதிலும் 1.50 லட்சம் பேருக்கு நிரந்தர அரசு வேலை கிடைக்கும். மீதமுள்ளவர்களுக்கு அரசு மற்றும் தனியார் சேர்ந்து நடத்தும் நிறுவனங்களில் வேலை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு - தனியார் நிறுவனங்களில் 75% வேலைவாய்ப்பு கிராமப்புற இளைஞர்களுக்கு கிடைக்கும். இதில் பயிற்சி பெற எந்த விதமான கட்டணமும் கிடையாது. சிவாஜி படத்தில் ஹீரோ இளைஞர்களுக்கு அதிரடியாக வேலை கொடுப்பது போல, ஆந்திர பிரதேசத்தில் முதல்வர் ஜெகன் அதிரடியாக களமிறங்கி இளைஞர்ளுக்கு வேகமாக வேலை கொடுத்து வருகிறார்.