ஆந்திர பிரதேசத்தில் தீ பிடித்து சேதம் அடைந்த கோவில் தேர்.. உருவான கலவரம்.. போலீசார் தீவிர விசாரணை
ஹைதராபாத்: ஆந்திர பிரதேசத்தில் கோவில் தேர் ஒன்று தீ பிடித்து எரிந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆந்திர பிரதேசத்தில் இருக்கும் அண்டர்வேடி பகுதியில் இருக்கும் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மக்கள் இடையே இந்த கோவில் மிகவும் பிரபலம்.
இந்த நிலையில் இந்த கோவிலின் திருத்தேர் தீ பிடித்து எரிந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 6ம் தேதி இந்த கோவில் தேர், அதிகாலை நேரத்தில் திடீரென மொத்தமாக தீ பிடித்து எரிந்துள்ளது.
பெய்ரூட் துறைமுகத்தில் மீண்டும் பயங்கர தீ விபத்து... தீயணைப்பில் ஹெலிகாப்டர்... மக்கள் அச்சம்!!
காரணம் தெரியவில்லை
இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று இன்னும் தெரியவில்லை. பெரும்பாலும் இந்த சம்பவம் விபத்தாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று விசாரணை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆந்திர பிரதேசத்தில் பாஜக, தெலுங்கு தேசம், ஆகிய கட்சிகள் இந்த சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி உள்ளது.
மிக மோசம்
இந்த சம்பவம் திட்டமிட்டு நடைபெற்று இருக்கலாம் என்று பாஜக தெரிவித்துள்ளது. அதேபோல் இந்த சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பவன் கல்யாணின் ஜன சேனா ஆகிய கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பின் மத ரீதியான காரணங்கள் இருக்கலாம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் குற்றஞ்சாட்டி உள்ளது.
சின்ன கலவரம்
கோவில் தேர் ஒன்று இப்படி தீ பிடித்து நாசமானதால் கோபம் அடைந்த ஆர்எஸ்எஸ், விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பினர் அங்கிருக்கும் சர்ச் ஒன்றை சரமாரியாக தாக்கினார்கள். கற்களை வைத்து சர்ச் மீது தாக்குதல் நடத்தினார்கள். இந்த சம்பவம் காரணமாக அங்கு பெரிய பதற்றம் ஏற்பட்டது. இது தொடர்பாக இணையத்தில் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.
கைது
இந்த கலவரத்தில் 5 பெண்கள், 3 சிறுவர்கள் உட்பட 43 பேர் ஈடுபட்டனர். இதில் பெண்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. 3 சிறுவர்கள் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த கோவிலுக்கு புதிய தேர் வாங்க 95 லட்சம் ரூபாயை அரசு உடனடியாக ஒதுக்கி உள்ளது. கவனக்குறைவாக இருந்த கோவிலின் நிர்வாக அதிகாரி நீக்கப்பட்டுள்ளார்.