வெங்காயம் வாங்க வந்த சாம்பையா.. நெஞ்சை பிடித்து கொண்டு பரிதாப மரணம்.. ஆந்திராவில் பெரும் சோகம்!
வெங்காயம் வாங்க வரிசையில் நின்றவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது
Recommended Video
ஹைதராபாத்: வெங்காயம் வாங்க வந்த சாம்பையா.. நெஞ்சை பிடித்து கொண்டு அப்படியே கீழே விழுந்து இறந்துவிட்டார்.. வெங்காயம் வாங்க வரிசையில் கால்கடுக்க காத்து நின்றபோது நடந்த இந்த சோகம் ஆந்திர மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.
வெங்காயத்தை நினைத்தாலே, இனம் புரியாத கலக்கம் வந்து கொண்டிருக்கிறது.. ஒவ்வொரு நாளும் வெங்காயத்தின் விலை நம்மை மிரள வைத்து வருகிறது.
நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்து வரும் நிலையில், ஆந்திரா முழுவதும் உழவர் சந்தைகளில் ரூ.25-க்கு ஒவ்வொருவருக்கும் ஒரு கிலோ வெங்காயம் அரசு மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
அதனால் அம்மாநில உழவர் சந்தைகளில் சாமானியர் முதல் உயர்தர குடி வரை கியூவில் வந்து நின்றுவிடுகின்றனர்.. எல்லாரும் வரிசையாக நின்று தங்களுக்கு உரிய வெங்காயத்தை வாங்கி கொண்டு போகிறார்கள்.. இதனால் உழவர் சந்தைகளில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு கியூ நிற்பதை காண முடிகிறது.
அப்படித்தான், கிருஷ்ணா மாவட்டம் குடிவாடா நகர் உழவர் சந்தையிலும் மக்கள் வரிசையில் நின்றிருந்தனர். இதில் ஒருவர்தான் சாம்பையா.. வெங்காயம் வாங்குவதற்காக கியூவில் நின்று கொண்டிருந்தவருக்கு திடீரென மாரடைப்பு வந்துவிட்டது. அதனால் நெஞ்சை பிடித்து கொண்டே அப்படியே கீழே மயங்கி விழுந்தார்.
இதை பார்த்து பதறிய பொதுமக்கள், சாம்பையாவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனாலும், ஆஸ்பத்திரி கொண்டு போவதற்குள் சாம்பையா உயிர் பிரிந்தது. வெங்காயம் வாங்க போனவர், பிணமாகி கிடப்பதை கண்டு, குடும்பத்தினர் கதறி துடித்து அழுதனர். இது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.