சி.ஏ.ஏ. எதிர்ப்பு- ஹைதராபாத்தில் தேசிய கொடியுடன் பிரமாண்ட பேரணி- குடும்பம் குடும்பமாக பங்கேற்பு!
ஹைதராபாத்: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் பல்லாயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக பங்கேற்ற பிரமாண்ட பேரணி இன்று நடைபெற்றது.
மத்திய அரசின் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஹைதராபாத்தில் ஐக்கிய முஸ்லிம் செயல்பாட்டுக் குழுவின் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசி சி.ஏ.ஏ. எதிர்ப்பு பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இப்பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக பங்கேற்றனர். கைகளில் தேசிய கொடி ஏந்தியபடி, சி.ஏ.ஏ.வுக்கு எதிராக முழங்கினர்.
இக்கூட்டத்தில் பேசிய ஓவைசி, ஹைதராபத்தில் இருந்து மத்திய அரசுக்கு இப்பேரணியானது முக்கிய செய்தியை எடுத்துச் சொல்கிறது. பொதுமக்களே நீங்கள் சி.ஏ.ஏ.வை எதிர்க்கிறீர்களா? என்.பி.ஆரை எதிர்க்கிறீர்களா? என்.ஆர்.சியை எதிர்க்கிறீர்களா? இந்தியா மதச்சார்பற்ற தேசமாக இருக்க விரும்புகிறீர்களா? தேசத்தின் அரசியல் சாசனம் பாதுகாக்கப்பட வேண்டும் என விரும்புகிறீர்களா? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.
ஒவ்வொரு கேள்விக்கும் பேரணியில் பங்கேற்றோர் ஆம் என உரத்து முழக்கம் எழுப்பினர். இப்பேரணிக்கு ஆதரவாக கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. பேரணியில் பங்கேற்றவர்கள் அம்பேத்கர் படங்களையும் கைகளில் ஏந்தி இருந்தனர்.