இஸ்லாமியர்களின் ஏக பிரதிநிதித்துவ கட்சியாக 2021-ல் உருவெடுக்கும் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி
ஹைதராபாத்: இந்திய எனும் மதச்சார்பற்ற தேசத்தில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இஸ்லாமியர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற பிரதான கட்சியாக ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி உருவெடுத்து கொண்டிருக்கிறது. 2021 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் தமிழகம், மேற்கு வங்கத்தில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி என்ன பங்காற்றப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாகும்.
ஹைதராபாத் லோக்சபா தொகுதியை 1984 முதல் இன்று வரை ஓவைசியின் மஜ்லிஸ் கட்சிதான் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. தெலுங்கானாவை தாண்டாத இஸ்லாமியர் கட்சியாக ஒருகாலத்தில் ஓவைசியின் கட்சி பார்க்கப்பட்டது.
2014-ல் தெலுங்கானா சட்டசபைக்குள் நுழைந்தது. 2014-ல் மகாராஷ்டிரா சட்டசபைக்குள் நுழைந்தது. உத்தரப்பிரதேசத்தில் ஓவைசி கட்சி போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது. இப்போது பீகாரில் போட்டியிட்டு 5 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. இந்த விஸ்வரூபத்தின் மூலம் அகில இந்திய கட்சியாக உருவெடுத்து நிற்கிறது மஜ்லிஸ் கட்சி.
மே.வங்க சட்டசபை தேர்தல்
மேற்கு வங்கத்தில் மஜ்லிஸ் கட்சி செய்யப் போகும் மாயாஜலம் அந்த மாநிலத்தின் தலைவிதியை தீர்மானிக்கலாம் என்றே அனைவராலும் கூறப்படுகிறது. மஜ்லிஸ் கட்சியின் செல்வாக்கை சரித்துவிட வேண்டும் என்பதற்காக சோ கால்ட் மதச்சார்பற்ற சக்திகள் இப்போதே தீவிரமாக இறங்கிவிட்டன. பாஜகவைவிட மஜ்லிஸ் கட்சியின் செல்வாக்குதான் இந்த மதச்சார்பற்ற கட்சிகளுக்கு பெரும் உறுத்தலாகிவிட்டது.
தமிழக சட்டசபை தேர்தல்
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் தமிழ்நாட்டிலும் மஜ்லிஸ் கட்சி என்ன செய்யுமோ? என்கிற எதிர்பார்ப்பும் கட்சிகளிடையே ஒருவித பதற்றமும் இருக்கிறது. தமிழகத்தில் மஜ்லிஸ்ட் கட்சியின் வகிபாத்திரத்தை வேறு ஒரு இஸ்லாமிய கட்சி நிரப்பவும் கூட முயற்சிக்கலாம். அல்லது மஜ்லிஸ் கட்சியே கூட நேரடியாக களமிறங்கலாம்.
ஓவைசி மீதான விமர்சனம்
பொதுவாக மஜ்லிஸ் கட்சியை பாஜகவின் பி டீம் என்றே மதச்சார்பற்ற கட்சிகள் விமர்சிக்கின்றன. ஒருவகையில் மஜ்லிஸ் கட்சியின் ஒவ்வொரு வருகையையும் பாஜகவும் மவுனமாக ரசிக்கவும் செய்கிறது. ஆனால் மஜ்லிஸ் கட்சிதரப்பும் சரி அரசியல் பார்வையாளர்களும் இதை வேறு ஒரு கண்ணோட்டத்தில் அணுகிப் பாருங்கள் என்கின்றனர். அதாவது இஸ்லாமியர்களை ஒரு வாக்கு வங்கிக்கான சக்தியாகவே சோ கால்ட் மதச்சார்பற்ற சக்திகள் இதுவரை பயன்படுத்தின.
நழுவும் கட்சிகள்
இஸ்லாமியர்களின் காத்திரமான பிரச்சனைகளில் நழுவல் போக்கை பல நேரங்களில் இந்த மதச்சார்பற்ற சக்திகள் வெளிப்படுத்தவும் செய்தன. உதாரணமான என்.ஆர்.சி., சி.ஏ.ஏ. விவகாரங்களில் ஆர்ஜேடி ஒருவிதமான மவுனத்தை கடைபிடித்தது. இத்தகைய நழுவல்களும் மவுனங்களும் இஸ்லாமியர்களிடம் ஆதங்கத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. பல இடங்களில் ஆழமான வடுவாகவும் இருக்கின்றன. இன்னொரு பக்கம் இஸ்லாமியர்களின் ஒற்றை குரலாக நாடாளுமன்றத்திலும் வீதிகளிலும் ஓவைசி மட்டுமே கம்பீரம் காட்டி நிற்கிறார்.
இஸ்லாமியர்களின் பிரதிநிதிகள்
என்னதான் இடதுசாரிகளும் காங்கிரஸும் ஆதரவுக் கரம் நீட்டுவதாக சொன்னாலும் இவர்கள் மீதான ஒருவித சலிப்பை இஸ்லாமிய சமூகம் வெளிப்படுத்த தொடங்கிவிட்டதுதான் மஜ்லிஸ் கட்சியின் எழுச்சி. தங்களது காயங்களுக்கு தாங்களே மருந்திட்டுக் கொள்வதுதான் முறையானதாகவும் இருக்கும் என்கிற முடிவோடு மஜ்லிஸ் கட்சியை உரிமையுடன் இஸ்லாமியர்கள் அரவணைக்கிறார்கள். வலதுசாரி இந்துத்துவா பெரும் உற்சாகத்திலும் உச்சாணிக் கொம்பிலும் இருக்கும் போது அதன் சரிநிகர் எதிரி கட்சியான மஜ்லிஸ் கட்சி மல்லுக் கட்டிக் கொண்டு பேரலையாக எழுவது என்பது வரலாற்றின் நியதி. அதனால்தான்ல் 2021-ல் ஓவைசியும் மஜ்லிஸ் கட்சியும் இஸ்லாமியர்களின் ஏக பிரதிநிதித்துவமாக இருப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.