ஆஹா.. ஆஹா.. இதுவல்லவோ விருந்து.. இப்டி ஒரு மாமியார் கிடைக்க அந்த மருமகன் என்ன தவம் செஞ்சாரோ!
மருமகனுக்கு விருந்து வைக்க ஆந்திர பெண் ஒருவர் 67 வகை உணவுகளை சமைத்து அசத்தியுள்ளார்.
ஹைதராபாத்: ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர், வீட்டுக்கு வரும் தனது மருமகனுக்காக தன் கையாலேயே 67 வகை உணவுகளை சமைத்து அசத்தியுள்ளார்.
'செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்வருந்து வானத் தவர்க்கு' என்பது வள்ளுவன் வாக்கு. அதாவது வீட்டுக்கு வரும் விருந்தினரை நன்றாக உபசரித்து வழியனுப்பிவிட்டு, அடுத்து வரும் விருந்தினருக்காக காத்திருப்பவர்களுக்கு, வானத்தவர்களால் (தெய்வங்கள்) நல்விருந்து வழங்கப்படும் என்பதே இத்திருக்குறளின் பொருள்.
அந்த அளவுக்கு விருந்தோம்பல் என்பது இந்தியர்களின் கலாச்சாரத்தில் ஒன்றிவிட்ட ஒரு விஷயம். குறிப்பாக பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாருக்கு அளிக்கும் விருந்தோம்பலுக்கு அளவே இருக்காது என்பார்கள். அதை உண்மை என நிரூபித்திருக்கிறார் ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர்.
வீட்டுக்கு வருகை தரும் மருமகனுக்காக 67 வகை உணவுகளை தன் கையாலேயே சமைத்து அசத்தி இருக்கிறார் அவர். பானகம், புதினா ஜூஸ், கேக், தங்கக் காசு பதிக்கப்பட்ட கொழுக்கட்டை, கட்லெட், கோபி 65, இரு வகை ஸ்வீட் பச்சடி, இரு வகை காரப் பச்சடி, இரு வகை பொரியல், இரு வகை கூட்டு, பல வகை குழம்புகள், பலவகை சாதங்கள் என இலை நிறைய சாப்பாட்டு ஐட்டங்களை நிரப்பி வைத்துவிட்டார்.
This lady has prepared a 67-item Andhra five-course lunch for her visiting son-in-law, consisting of a welcome drink, starters, chaat, main course and desserts! Wow! #banquet pic.twitter.com/Li9B4iNFvc
— Ananth Rupanagudi (@rananth) July 8, 2020
இது தவிர பாயாசம், ஸ்வீட்ஸ், சாட் ஐட்டம்ஸ், பீடா என மொத்த 67 வகையான உணவுகளை மாப்பிள்ளைக்காக சமைத்து அசத்தி இருக்கிறார் அந்த பெண். இவை அனைத்தையும் அந்த பெண்ணே தன் கையால் சமைத்து இருக்கிறார் என்பது தான் ஹைலைட்.
இந்த விஷயங்களை தனது சமூகவலைதளப்பக்கத்தில் அந்த பெண் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்து அசந்துபோன நெட்டிசன்கள், அவரது பதிவை வைரலாக்கிவிட்டனர். இதையே மீம்ஸ் டெம்ப்ளேட்டாக்கி, மனைவிகளையும், மாமியார்களையும் கலாய்த்து வருகின்றனர் பல மருமகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.