வேலண்டைன்ஸ் டே கொண்டாடக்கூடாது.. ஹைதராபாதில் ஓட்டல்கள், மால்களை மிரட்டும் பஜ்ரங் தள்
Recommended Video
ஹைதராபாத்: உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், எந்த வித கொண்டாட்டங்களிலும் ஈடுபடக்கூடாது என்று பஜ்ரங் தள் அமைப்பினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஆண்டுதோறும்... பிப்ரவரி என்றாலே நம் நினைவிற்கு வருவது காதலர் தினம் எனப்படும் வேலண்டைன்ஸ் டே. பிப்ரவரி 14ம் தேதி... காதலர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என்பதற்கு ஒரு சுவாரஸ்யமான கதை ஒன்றும் உள்ளது.
ரோம் நாட்டில் கிளாடியூஸ் என்ற மன்னன் ஆட்சி செய்த போது, இனி யாரும் திருமணம் செய்து கொள்ள கூடாது, ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்ட திருமணங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அந்நாட்டு பாதிரியார் வேலண்டைன் என்பவர் அரசரின் உத்தரவை மீறி ரகசிய திருமணங்களை நடத்தி வைத்துள்ளார்.
தண்டனை விதிப்பு
இந்த விவகாரங்கள் அனைத்தும் கிளாடியூஸிற்கு தெரிந்ததால், வேலண்டைனை கைது செய்ததோடு, அவருக்கு மரண தண்டனையும் விதித்தார். இதற்கிடையில் சிறைக்காவலரின் மகள் அஸ்டோரியசுடன் காதல் மலர்ந்தது.
தலை துண்டிப்பு
அதனால் அவர் தந்தையால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார் அஸ்டோரியஸ். வேலண்டைன் தமது காதலிக்கு முதல் வாழ்த்து அட்டை செய்தி அனுப்பினார். அந்த கடிதத்தை படிக்கும் அதே நேரத்தில் கல்லால் அடிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு வேலண்டைனின் தலை துண்டிக்கப்படுகிறது.
காதலர் தினம்
அந்த நாள் பிப்ரவரி 14, கி.பி.270ம் ஆண்டு. அந்த நாளை தான்... காதலர் தினமாக உலகம் முழுவதும் மக்கள் கொண்டாடுகின்றனர்.நாளை பிப்ரவர் 14-ல் உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாட உள்ள நிலையில், காதலர்கள் ஓட்டல்கள், மால்களில் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபடுவர்.
பஜ்ரங் தள் மிரட்டல்
இந்நிலையில் பஜ்ரங் தள் அமைப்பினர் நாளை ஹைதராபாத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் போராட்டத்தில் வேலண்டைனின் உருவபடத்தை எரிக்க போவதாக அறிவித்துள்ளனர். காதலர் தினத்தை முன்னிட்டு எந்த வித கொண்டாட்டங்களிலும் ஈடுபடக்கூடாது என்று அனைத்து ஓட்டல்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மிரட்டல் கடிதம் எழுதியுள்ளனர்.
முதல் முறையல்ல
எச்சரிக்கையை மீறி கொண்டாடினால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்றும் அந்த அமைப்பினர் மிரட்டல் விடுத்து உள்ளனர். காதலர் தினம் கொண்டாடக்கூடாது என்று மிரட்டுவது இது முதல் முறையல்ல. விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் காதலர் தினத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பதிவாகும் வழக்குகள்
கடந்த ஆண்டு வன்முறையில் ஈடுபட்டதற்காக அந்த அமைப்பினர் மீதும், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மீதும் பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டும் அவர்கள் தொடரந்து மிரட்டல் விடுத்துள்ளனர். காதலர் தினம் நம் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.