இந்தியாவில் மூன்றாம் கட்ட கோவாக்சின் மனித பரிசோதனை...அக்டோபரில் துவக்கம்!!
ஐதராபாத்: இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்து இருக்கும் கொரோனா தடுப்பு ஊசியான கோவாக்சின் மூன்றாம் கட்ட மனித பரிசோதனை இந்தியாவில் அக்டோபர் மாதம் துவங்க இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஐதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பு ஊசியை கண்டுபிடித்துள்ளது. இதன் முதல் கட்ட மனித பரிசோதனை முடிவுகள் இந்திய மருந்து கட்டுப்பாடு ஜெனரலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்ட மனித பரிசோதனை தற்போது நடந்து வருகிறது.
இந்த நிலையில் மூன்றாம் கட்ட மனித பரிசோதனை வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடத்தப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து இந்த தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் கண்டுபிடித்துள்ளது.
மூன்றாம் கட்ட மனித பரிசோதனைக்கு 25,000-30,000 வரையிலான தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது. தற்போது மனித பரிசோதனை நடந்து வந்தாலும், அதற்கு ஐதராபாத்தில் இருக்கும் இந்த நிறுவனத்தின் இரண்டு இடங்களில் தடுப்பூசி தயாரிப்பு ஏற்கனவே துவங்கி நடந்து வருகிறது.
8 மரபணுவில் 39 உருமாற்றம்...மும்பை மருத்துவர்களுக்கு மீண்டும் கடுமையான கொரோனா தொற்று!!
இதுகுறித்து பாரத் பயோடெக் தரக் கட்டுப்பாட்டு தலைவர் சாய் பிரசாத் அளித்திருக்கும் பேட்டியில், ''தற்போது ஐதராபாத்தில் இருக்கும் இரண்டு தயாரிப்பு இடங்களில் மொத்தம் 100 முதல் 200 மில்லியன் டோஸ் தடுப்பு ஊசி மருந்தை தயாரிக்கலாம்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பு ஊசி மருந்தை தயாரிப்பதற்கு நான்கு நாடுகளுடன் பாரத் பயோடெக் நிறுவனம் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு பில்லியன் டோஸ் மருந்து தயாரிப்பதற்கு இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே ஆக்ஸ்போர்டு, ஆஸ்ட்ராஜெனிகா தயாரிப்பு மருந்தான கோவிஷீல்ட் மற்றும் சைடஸ் கேடிலா நிறுவனத்தின் சை-கோவி-டி மருந்து மனித பரிசோதனை நடந்து வருகிறது.