கொரோனா:ஊசிக்கு பதில் மூக்கில் போடும் சொட்டு மருந்தாக தயாரிக்க முயற்சி: 'பாரத் பயோடெக்' கிருஷ்ண எல்லா
ஹைதராபாத்: கொரோனா தடுப்பு ஊசிக்கு பதிலாக மூக்கில் போடும் சொட்டு மருந்தாகவும் தயாரிக்க முயற்சிப்பதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண எல்லா தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளை பேரழிவுக்குள்ளாக்கி இருக்கிறது கொரோனா தொற்று. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
உலக நாடுகளில் தற்போதைய நிலையில் இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு - அஸ்ட்ராஜெனேகா, ஃபைசர், மாடர்னா மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V ஆகிய தடுப்பு மருந்துகள் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது.
இதுவரையிலான கோவேக்சின் பரிசோதனைகள் அனைத்தும் நோயை கட்டுப்படுத்தும் வகையில் திறம்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பு மருந்தை இந்தியாவின் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரி மருந்து தயாரிப்பு நிறுவனம் உருவாக்கி வருகிறது.
மேலும் ஆக்ஸ்ஃபோர்டு - அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கான பரிசோதனைகளை இந்தியாவின் சீரம் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகளை பிரதமர் மோடி நேற்று நேரில் பார்வையிட்டிருந்தார்.
ஒரே நாளில் மாஸ்.. 3 தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் பிரதமர் ஆய்வு.. முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?
இதனிடையே, கோவேக்சின் தடுப்பூசியை எளிதாக மூக்கில் போடும் சொட்டு மருந்தாக தயாரிக்க முயற்சிப்பதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண எல்லா, பிபிசி தமிழோசை ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மூக்கில் போடும் சொட்டு மருந்தாக தயாரித்தால் கிராம மக்களிடம் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் மக்களுக்கு இதை எளிதில் கொண்டு செல்ல முடியும் என்றும் கிருஷ்ண எல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.