கையை விட்டுவிட்டு அம்பாசிடரில் ஏறும் அசாரூதின்… தெலுங்கானாவில் மீண்டும் சறுக்கும் காங்கிரஸ்
Recommended Video
ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவருமான அசாரூதின், அக்கட்சியில் இருந்து விலகி சந்திரசேகர் ராவின் டிஆர்எஸ் கட்சியில் விரைவில் இணைகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்.பியானார். 2009-ம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் போட்டியிட்டு வென்றார். ஆனால் 2014-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் மதோபூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த அசாருதீன், லோக்சபா தேர்தலில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட விரும்பினார். எனினும் காங்கிரஸ் தலைமை அதை ஏற்க மறுத்தது. சமீபத்தில் தெலங்கானா மாநில சட்டசபை தேர்தல் நடந்தநிலையில், அவரை காங்கிரஸ் தலைமை சமாதானம் செய்தது.
ஹைதராபாத் கொடுங்கள்
தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல்தலைவராக அசாருதீன் நியமிக்கப் பட்டார். மேலும் வரும் லோக்சபா தேர்தலில் மல்ஜாஜ்கிரி தொகுதியில் அவரை களமிறக்கவும் காங்கிரஸ் தலைமை திட்டமிட்டு வந்தது. ஆனால் அந்த தொகுதியில் போட்டியிட விரும்பாமல் ஹைதராபாத் தொகுதியே வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.
டிஆர்எஸ் கட்சிக்கு ஓகே
இந் நிலையில் அவர் காங்கிரஸில் இருந்து விலகி தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் முடிந்த தெலுங்கானா சட்டசபை தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி பெரும் வெற்றி பெற, லோக்சபா தேர்தலில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு குறையும் என்று கருதப்படுகிறது.
திருமணத்தில் சந்திப்பு
அந்த சமயத்தில் மஜ்லிஸ்-இ-இத்ஹாதுல் முஸ்லிமன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி இல்ல திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. ஒவைசி தமது நெருங்கிய நண்பர் என்பதால் அசாருதீனும் அந்த திருமணத்தில் கலந்து கொண்டார்.
கேசிஆருடன் சந்திப்பு
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் , அவரது மகன் கே.டி. ராமாராவ், மகளும் எம்.பி.யுமான கவிதா உள்ளிட்டோரும் திருமணத்தில் பங்கேற்றனர். அப்போது சந்திரசேகர் ராவ் குடும்பத்தினரை அசாருதீன் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அதன் பின்னரே அவர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் தம்மை இணைத்துக் கொள்ள இறுதி முடிவு எடுத்துள்ளார்.தெலுங்கானா ராஷ்டிர சமதி சார்பில் செகந்திராபாத் லோக்சபா தொகுதியில் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.