தெலுங்கானாவில் காவி கொடி விரைவில் பறக்கும்... காங். டி.ஆர்.எஸ். வாக்கு வங்கிகள் கபளீகரம்!
Recommended Video
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகளின் வாக்குகள் கணிசமான அளவுக்கு பாஜகவுக்கு இம்முறை கிடைத்திருக்கிறது. இந்த நிலைமை விஸ்வரூபமெடுத்தால் தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைவதை தடுக்க முடியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்.
தேர்தல் முடிவுகள் தொடர்பாக தி இந்து சிஎஸ்டிஎஸ்- லோக்நிதி நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்ப்ட்டுள்ளதாவது:
தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 17 லோக்சபா தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 9 இடங்களையும் காங்கிரஸ் 3; பாஜக -4 ; மஜ்லிஸ் கட்சி 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளது.
வாக்குகள் திசைமாற்றம்
தெலுங்கானாவில் உயர் ஜாதியினர், ரெட்டிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகளின் வாக்கு வங்கியாக இருந்து வந்தனர். இதில் ரெட்டிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மட்டும் 40% முதல் 50% வரை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு வாக்களித்திருக்கின்றனர். இம்முறை இந்த வாக்க்கு சதவீதம் 31 முதல் 41% ஆக குறைந்துள்ளது.
காங்.க்கும் குறைவு
அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு 29 முதல் 43% வரை ஆதரவளித்த இச்சமூகத்தினர் இம்முறை 21 முதல் 25% என குறைவாகவே வாக்களித்துள்ளனர். அதேநேரத்தில் பாஜக்வுக்கு 7 முதல் 9% வரைதான் இதுவரை இந்த சமூகத்தினர் வாக்களித்தனர். ஆனால் இம்முறை 25% முதல் 33% வரை வாக்களித்திருக்கின்றனர். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் காங்கிரஸின் வாக்குகளை அப்படியே தன்வசம் திருப்பி இருக்கிறது பாஜக.
பாஜகவுக்கு தாவிய உயர்ஜாதி
உயர் ஜாதியினர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கும் காங்கிரஸுக்கும் அளித்த வாக்குகளை இம்முறை பாஜகவுக்கு அள்ளிக் கொடுத்துள்ளனர். இதுவும் பாஜகவின் விஸ்வரூப வளர்ச்சிக்கு ஒரு காரணியாகும். பாஜகவுக்கு உயர் ஜாதியினரின் 41% வாக்குகள் கிடைத்துள்ளன. இப்படி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ் வாக்குகள் பெருமளவுக்கு பாஜகவுக்கு திரும்புவது தொடர்ந்தால் தெலுங்கானாவும் பாஜக வசமாகும் என்பது யதார்த்தம்.
இஸ்லாமியர் வாக்குகள்
இதில் இன்னொரு அம்சமும் கவனிக்கப்பட வேண்டியிருக்கிறது. இஸ்லாமியர்கள் வாக்கு சதவீதம் என்பது காங்கிரஸுக்கும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கும் இம்முறை அதிகமாக கிடைத்திருக்கிறது. இஸ்லாமியர்கள் வாக்குகள் ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதும் கவன்னிக்கத்தக்கது.