டிஆர்எஸ்சின் இரும்பு கோட்டை.. உள்ளே புகுந்து கொடி நாட்டிய பாஜக.. அப்படியே ஆடிப்போன சந்திரசேகர ராவ்
ஹைதராபாத்: துபாக்கா இடைத்தேர்தல் முடிவுகள் தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி (டிஆர்எஸ்) கட்சிக்கும், முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
23 சுற்றுகள் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில், பாஜகவின் மாதவனேனி ரகுநந்தன் ராவ், டிஆர்எஸ் வேட்பாளர் சோலிபேட்டா சுஜாதாவை விட 1,118 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தொழில்நுட்ப காரணங்களால் நான்கு ஈ.வி.எம் க்கான எண்ணிக்கை நிலுவையில் இருந்ததால் சற்று இழுபறிக்கு பிறகு இந்த ரிசல்ட் வெளியானது.
பீகாரில் நமது மகா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் - ராஷ்டிரிய ஜனதா தளம் ட்வீட்
எச்சரிக்கை
பாஜக 62,772 வாக்குகள் மற்றும் டிஆர்எஸ் 61,302 வாக்குகள் பெற்றன. காங்கிரசின் செருகு சீனிவாஸ் ரெட்டி 21,819 வாக்குகள் மட்டுமே பெற்றார்.இந்த இடைத் தேர்தல் முடிவு சந்திரசேகர ராவுக்கு ஒரு எச்சரிக்கை மணி என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். பாஜக விஸ்வரூபம் எடுத்துள்ளதை இந்த வெற்றி காட்டுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
ஆளும் கட்சி கோட்டை
முதல்வர் கே.சி.ஆரின், கஜ்வெல் தொகுதி, முதல்வரின் மகன் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரான கே.டி.ஆரின் சிர்சில்லா தொகுதி, மற்றும் முதல்வரின் மருமகன் ஹரிஷ் ராவின் கோட்டையான சித்திப்பேட்டை ஆகிய தொகுதிகளுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள தொகுதிதான் துபாக்கா. எனவே, இது சந்திரசேகரராவுக்கு கவுரவப் பிரச்சினையாக இருந்த தொகுதி.
சொந்த தொகுதி
அது மட்டுமல்ல. டி.ஆர்.எஸ் கட்சியின் எம்.எல்.ஏ ராமலிங்க ரெட்டி மரணமடைந்ததால்தான் துபாகா சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. எனவே தங்களது தொகுதியை மீண்டும் தக்க வைக்க டிஆர்எஸ் கட்சிக்கு தேவை இருந்தது. ஆனால் வளர்ந்து வரும் கட்சியான பாஜகவிடம் தோற்றுள்ளதுதான் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக அபாரம்
துபாக்கா இடைத்தேர்தலில், டி.ஆர்.எஸ் கட்சி, ராமலிங்க ரெட்டியின் மனைவி சோலிபேட்டா சுஜாதாவை களமிறக்கியது. பா.ஜ.க சார்பில் ரகுநந்தன் ராவ் போட்டியிட்டார். செருகு சீனிவாஸ் ரெட்டியை காங்கிரஸ் களமிறக்கியது. ரகுநந்தன் மற்றும் சீனிவாஸ் இருவரும் கடந்த காலத்தில் டி.ஆர்.எஸில் இருந்தவர்கள் என்பது இதில் சுவாரசியமானது.
சந்திரசேகர ராவ் அதிர்ச்சி
சந்திரசேகர ராவ் கட்சிக்கு தெலுங்கானாவில் மொத்தமுள்ள 120 சீட்களில், 100 சீட்களில் எம்எல்ஏக்கள் உள்ளனர். தோற்கடிக்கவே முடியாத கட்சி என்று, கர்வத்தோடு இருந்த டிஆர்எஸுக்கு பாஜகவின் இந்த வெற்றி பெறும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த அதிர்ச்சியிலிருந்து சந்திரசேகர ராவ் இன்னும் மீளவில்லை.