ஷாக் வீடியோ.. "மாஸ்க் எங்கே" என கேட்ட மாற்று திறனாளி பெண்.. தலைமுடியை பிடித்து உதைத்த திமிர் அதிகாரி
ஹைதராபாத்: "மாஸ்க் எங்கே" என்று கேட்ட பெண் ஊழியர் உஷாவின் தலைமுடியை பிடித்து, இழுத்து.. கீழே தள்ளி, எட்டி எட்டி உதைத்தார் ஒரு அதிகாரி... இப்படி ஒரு கொடூர தாக்குதல் நெல்லூரில் நடந்துள்ளது.. அந்த வீடியோவும் வெளியாகி உள்ளது.. இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர்!
ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆந்திர மாநில சுற்றுலாத் துறை ஹோட்டல் இயங்கி வருகிறது.. இங்கு அசிஸ்டெண்ட் மேனேஜராக இருப்பவர் பாஸ்கர் ராவ்... அதே ஹோட்டலில் வேலை பார்ப்பவர் உஷா.. இவர் ஒரு ஒப்பந்த ஊழியர்.. மாற்று திறனாளி என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் வேலை சம்பந்தமாக உஷாவிடம், பாஸ்கர்ராவ் பேச வந்தார்.. அப்போது, பாஸ்கர் முகத்தில் மாஸ்க் அணியவில்லை போலும்.. இதை பார்த்த உஷா, மாஸ்க் அணிந்து கொண்டுதான் தன்னிடம் பேசவேண்டும், இன்னொரு முறை மாஸ்க் இல்லாமல் யாரிடமும் பேசக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார்.
இது பாஸ்கருக்கு ஆத்திரத்தை தந்துவிட்டது.. "நான் டிகிரி முடிச்சிட்டு, வேலைக்கு வந்தவன்.. நீ ஒரு படிக்காதவள், எனக்கு அட்வைஸ் பண்றியா?" என்று கேட்டு மிரட்டியபடியே அங்கிருந்து நகர்ந்தார். அப்போதும் ஆத்திரம் அடங்காமல், திரும்பவும் ஓடிப்போய், சீட்டில் உட்கார்ந்திருந்த உஷாவை பளார் என அறைந்தார்.. அவரது முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டு அடித்தார்.
பிறகு பக்கத்தில் கிடந்த ஒரு கட்டையை எடுத்து அவரது தலையில் மடார் என தாக்கினார்.. வலி பொறுக்க முடியாமல் உஷா அலறி கதறினார்.. அப்போதும் பாஸ்கர் விடவில்லை... உஷாவை எட்டி எட்டி உதைத்தார். இதற்கு பிறகுதான் அங்கிருந்த ஊழியர்கள் ஓடிவந்து பாஸ்கரை தடுத்து நிறுத்தினர்... இந்த வீடியோ அங்கிருந்த சிசிடிவி காட்சியிலும் பதிவாகியது.
தற்போது வீடியோ வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும் ஷாக் ஆகி உறைந்து வருகின்றனர்.. நடந்தது குறித்து தர்க்கா மிட்டா ஸ்டேஷனில் உஷா புகார் தந்தார்... அந்த புகாரின்பேரில் பாஸ்கர் ராவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.. சிசிடிவி கேமிராவை கொண்டு விசாரணையும் நடந்து வருகிறது.
இதையடுத்து, பாஸ்கர் ராவை போலீசார் கைது செய்துள்ளனர.. அவரிடம் தீவிர விசாரணையும் நடந்து வருகிறது. முன்னதாக, ஆந்திர மாநில சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகள், பாஸ்கர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.