இந்த முறை கூட்டணி ஆட்சிதான்.. சந்திரசேகரராவே சொல்லிட்டாரு!
ஹைதராபாத்: இந்த லோக்சபா தேர்தலில் மத்தியில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.
சந்திரசேகரராவ் கணிப்புகள் பொதுவாக மதிக்கப்படுபவை. சரியாக இருக்க கூடியவை. அவர் ஆங்கில டிவி சானலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: பிரதமராவது எனது நோக்கம் இல்லை. அதற்கான திட்டமும் என்னிடம் இல்லை. ஆனால், இந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இருக்கப்போகிறது.
மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து மத்தியில் அடுத்து அமையும் ஆட்சியை முடிவு செய்யும் சூழ்நிலைதான் இம்முறை மீண்டும் உருவாகப்போகிறது. கடந்த முறை போல அறுதிப் பெரும்பான்மை பெற்ற கட்சியாக எதுவுமே உருவாக வாய்ப்பில்லை. மத்தியில் அடுத்து கூட்டணி ஆட்சி தான் அமையும்.
ஏனெனில், கடந்த தேர்தலில், பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில் கூட இம்முறை அக்கட்சி தோல்வியை சந்திக்க நேரிடும். 2014 ல் இருந்த சூழ்நிலை வேறு என்பதே இதற்கு காரணம். நாட்டில் இப்போது தலைமைக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஒரே சிந்தனைகளை கொண்ட கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்துவதே சரியாக இருக்கும். அப்போதுதான் நாடு முழுமைக்கும் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறினார்.