பவன் கல்யாணுடன் கை கோர்த்த இடதுசாரிகள்.. சந்திரபாபுவுக்கு பெரும் நெருக்கடி
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் மக்களவை தேர்தல் முதற்கட்டமான ஏப்ரல் 7 ம் தேதி நடைபெறவுள்ளது. அதோடு சேர்த்து மாநில சட்டப்பேரவைக்கான தேர்தலும் நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் 25 மக்களவை தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடைபெற உள்ளது.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்தை பெற்று தருவது, தெலுங்கானா மாநிலம் பிரிந்த பிறகு புதிய தலைநகரை உருவாக்குவது, விவசாயிகள் பிரச்சனை, இதனால் நிகழ்ந்த தற்கொலைகள் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பெரும் பிரச்சனைகள் உள்ளன.
இதுதான் முதல்முறை.. மோடியை நேரடியாக தாக்கி பேசிய பிரியங்கா.. என்ன சொன்னார் தெரியுமா?
மக்கள் அதிருப்தி
இதனால் தெலுங்கு தேசம் கட்சிமீது ஆந்திர மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தேர்தல் நெருங்கி வந்த சூழலில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியும் காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் தெலுங்கு தேசம் கட்சியோடு கூட்டணி அமைக்காது என்று அம்மாநில காங்கிரஸ் அறிவித்ததோடு தற்போது அந்த மாநிலத்தில் தனித்தே களம் காண்கிறது.
ரெட்டி கட்சி
இது ஒருபுறம் என்றால் ஆந்திராவில் உள்ள பிரச்சனைகள் காரணமாக சந்திரபாபு நாயுடு மீதான அதிருப்தியை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சரியாக அறுவடை செய்துவந்தந்து. ஜெகன் மோகன் ரெட்டிக்கு மாநிலத்தில் ஆதரவு பெருகி வந்தது. இந்நிலையில் தனது கட்சி வேட்பாளர் பட்டியலை ஜெகன்மோகன் ரெட்டி நேற்று வெளியிட்டார். இதுவே சந்திர பாபுவுக்கு நெருக்கடியை கொடுக்கும் என்ற சூழலில் பவன் கல்யாணும் இப்போது சந்திரபாபுவை அச்சுறுத்த ஆரம்பித்துள்ளார்
சிரஞ்சீவி தம்பி
நடிகரும் ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாணுடன் மார்க்சிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலில் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி மாநிலத்தில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 140 தொகுதிகளிலும், 25 மக்களவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மக்களவைத் தேர்தலில் 3 தொகுதிகளும், சட்டப்பேரவைத் தேர்தலில் 21 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளது.
இரு முனைத் தாக்குதல்
இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும், தலா 7 சட்ட மன்ற தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளன. ஏற்கனவே ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் கட்சியின் நெருக்கடி ஒருபுறம் சந்திர பாபுவை நேருக்க இன்னொருபுறத்தில் பவன் கல்யாணும் நேருக்க ஆரம்பித்துள்ளார்.
பாஜக காங்கிரஸ்
இவர்களின் நிலை இப்படி இருக்கையில் காங்கிரசும் பாஜகவும் தனியாக போட்டியிடுகின்றன. இதனால் ஆந்திராவில் ஐந்து முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. இந்த ஐந்து முனைப் போட்டி யாருக்கு சாதகமாக அமையப் போகிறது சந்திரபாபு மீண்டும் கரை ஏறுவாரா என்ற கேள்வி அரசியல் நோக்கர்களிடையே இப்போதே எழுகிறது.