வெற்றிகளை அள்ளி குவித்த சந்திரசேகர ராவ்.. 2-ஆவது முறையாக முதல்வராக நாளை பதவியேற்பு
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வராக நாளை சந்திரசேகர ராவ் பதவியேற்கிறார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு தனி மாநிலமாக தெலுங்கானா உருவெடுத்தது. அப்போது நடந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரிய கட்சியின் தலைவரும் தனி தெலுங்கானா போராளியுமான சந்திரசேகர ராவ் வெற்றி பெற்றார்.
இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் சட்டசபையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த கோரினார். அதன்படி கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடந்தது.
இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் 119 தொகுதிகளில் 88 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
கஜேவால் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் அபார வெற்றி பெற்ற சந்திரசேகர ராவ் நாளை முதல்வராக பதவியேற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.