பாஜக உள்ளிட்ட கட்சிகளை போட்டு.. "ஹைதராபாத் பிரியாணி" கிண்டிய கேசிஆர்!
2-வது முறையாக தெலுங்கானாவில் ஆட்சி அமைக்க போகிறார் கேசிஆர்
ஹைதராபாத்: தனக்கு எதிராக கிண்டி விடப்பட்ட ஒரு பிரியாணி மேட்டரையே சாதகமாக பயன்படுத்தி கொண்டார் சந்திரசேகர ராவ்!!!
இவரின் வெற்றி ஏற்கனவே கணிக்கப்பட்டு விட்ட ஒன்றுதான் என்றாலும், இப்போது இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். அந்த அளவுக்கு வரலாறு படைத்து விட்டார் கேசிஆர்.
இவரது சூட்சுமம் என்று சொல்ல வேண்டுமானால், இவர் தேர்தலை சந்தித்த விதம்தான். எந்த பெரிய கட்சியையும் நம்பவில்லை, யாருடனும் சேரவில்லை. இரு தேசிய கட்சிகள் என்றாலும் அவைகளை கொஞ்சம் தள்ளி வைத்துதான் யோசித்து முடிவெடுத்தார்.
சட்டப்பேரவை கலைப்பு
இரண்டாவது காரணம், பதவிக்காலம் தனக்கு இருந்தாலும் கொஞ்சமும் பயமின்றி 6 மாதத்திற்கு முன்னமேயே சட்டப்பேரவையை கலைத்தார். துணிந்து தேர்தலை சந்தித்தார். தெலுங்கானாவின் பிரகாசமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுப்பதாக பகிரங்கமாக சொன்னார். ஆனால் இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்து அடங்கின.
ஒவைஸி கூட்டணி
மூன்றாவதாக, காலங்காலமாக பாஜக, காங்கிரஸ் கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வருவதை உடைக்க பெரும் முயற்சி எடுத்தார். இதற்காகத்தான் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அகில இந்திய முஸ்லீம் மஜ்லிஸ் கட்சியின் ஒவைஸியை சேர்த்து கொண்டார். இந்த சூட்சுமம்தான் சந்திரசேகர ராவுக்கு முக்கியமாக கை கொடுத்தது என்று சொல்லலாம்.
பிரச்சாரம்
எப்போது ஒவைஸி ஆதரவு சந்திரசேகருக்கு கிடைக்க ஆரம்பித்ததோ, அப்போதே பாஜக, காங்கிரசின் எதிர்ப்புகளை நிறைய சம்பாதித்தார். ஆனால் காங்கிரஸ் மீது எவ்வளவு வெறுப்பை காட்டினாரோ அதே அளவுக்கு சந்திரபாபுநாயுடு மீதும் காட்டினார். இவர்கள் இரண்டு பேரைதான் அதிக அளவு பிரச்சாரத்தின்போது விமர்சித்தார்.
தங்க குடும்பம்
ராகுல் சொல்லும்போது, "மாநிலத்தை தங்கமாக மாற்றுவார் என மக்கள் கனவு கண்டால், சந்திரசேகரராவ் தனது குடும்பத்தை தங்க குடும்பமாக மாற்றி விட்டார்" என்றார்.
அமித்ஷா குற்றச்சாட்டு
பிறகு பாஜக தரப்பில் பிரியாணி பிரச்சனை எழுப்பப்பட்டது. பிரச்சாரத்தின்போது, அமித் ஷா, "சந்திரசேகர் ராவ், முஸ்லிம் மக்களுக்கு பிரியாணி கொடுத்து ஆதரவு திரட்டி வருகிறார்" என குற்றம்சாட்டி இருந்தார்.
எலுமிச்சை மிளகாய்
சந்திர சேகர ராவ் பொதுவாகவே பக்தி நிறைந்தவர், ஆனால் இதைகூட மோடி கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்தார், "முழுமையாக 5 ஆண்டுகள் கூட ஆட்சி நடத்த முடியாத சந்திரசேகர ராவ் தன் மீது நம்பிக்கை வைத்ததை விட, அடிக்கடி பூஜைகள் செய்து, எலுமிச்சை, மிளகாய் மீதே அதிகம் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று கிண்டல் செய்துவிட்டு போனார்.
திரும்பி பார்க்க வைத்தார்
இப்படி ராகுலின் விமர்சனம் ஆகட்டும், அமித்ஷாவின் பிரியாணி விஷயம் ஆகட்டும், எல்லாவற்றையுமே தனக்கு சாதகமாக திருப்பி விட்டார் சந்திர சேகரராவ். இன்று பழமை வாய்ந்த, பாஜக கோட்டைகளான மூத்த மாநிலங்களைவிட இந்தியாவின் மிகவும் வயது குறைவான மாநிலமான தெலுங்கானாவை திரும்பி பார்க்க வைத்துள்ளார் சந்திரசேகரராவ்.
தவிடு பொடி
இது நிச்சயம் டிஆர்எஸ்ஸுக்கு மட்டுமல்லாமல் கேசிஆருக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் ஒரே வெற்றியின் மூலம் அவர் 3 மாங்காய்களைப் பறித்துள்ளார் - தெலுங்கு தேசத்தின் திட்டத்தை தவிடு பொடியாக்கியுள்ளார், பாஜக கனவை வீழ்த்தியுள்ளார், 3வது முக்கியமாக நாயுடு அமைத்த மெகா கூட்டணியை பஸ்பமாக்கி விட்டார்.