சைபர் தாக்குதல் பிளான்.. தெலுங்கானா மின் நிலையங்களுக்கு சீனாவின் குறி.. கடைசி நேரத்தில் முறியடிப்பு!
ஹைதராபாத்: தெலுங்கானாவில் இருக்கும் 2 மின் நிலையங்களை சீனாவின் சைபர் தாக்குதல் குழு தாக்க முயன்றுள்ளது. மும்பை சைபர் தாக்குதலை தொடர்ந்து தெலுங்கானாவையும் சீன ஹேக்கர்கள் குறி வைத்துள்ளனர்.
2020 அக்டோபர் 13ம் தேதி மும்பை நகரம் முழுக்க பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. இந்தியாவின் பொருளாதார தலைநகரமே இந்த மின்தடை காரணமாக மொத்தமாக முடங்கி போய் இருந்தது.
மும்பையின் பல்வேறு பகுதிகளில் இந்த மின்தடை நீண்ட நேரம் நீடித்தது. நீண்ட நேர சீரமைப்பு பணிகள் செய்த பின்புதான் மும்பையின் இந்த இருள் முடிவிற்கு வந்தது. மும்பையை உலுக்கிய இந்த மின்தடைக்கு பின் சீனாவின் சைபர் அட்டாக்தான் காரணம் என்று தி நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனா
சீனாவின் சைபர் அட்டாக் கும்பல் (அரசின் ஆதரவு பெற்ற குழு) மும்பையில் இருக்கும் மின் உற்பத்தி மற்றும் விநியோக மையங்களை குறி வைத்து இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. வைரஸ் ஒன்றை ஹேக்கிங் மூலம் மின் உற்பத்தி மற்றும் விநியோக மையங்களின் சர்வருக்கு அனுப்பி அதன்மூலம் டேட்டாக்களை திருடுவது, மின் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதுதான் இந்த சைபர் தாக்குதலின் நோக்கம்.
மோதல்
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே கடந்த வருடம் மே மாதம் மோதல் ஏற்பட்டது. ஆனால் இந்த மோதலுக்கு முன்பாகவே சீனா தனது சைபர் அட்டாக் தாக்குதல்களை தொடங்கிவிட்டது என்கிறார்கள். இந்தியாவில் 12 மாநில அரசுகளின் மின் உற்பத்தி மற்றும் விநியோக மையங்களை இந்த சைபர் தாக்குதல் குழு குறி வைத்துள்ளது .
தாக்குதல்
இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி மையமான என்டிபிசி லிமிட்டட் தொடங்கி பல முக்கிய மின் உற்பத்தி மையங்களை சீனாவின் இந்த சைபர் குழு குறி வைத்துள்ளது. இந்த தாக்குதல் திட்டத்தின் மூலம்தான் மும்பையில் இருக்கும் மின் நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த நிலையில் தற்போது தெலுங்கானாவில் இருக்கும் 2 மின் நிலையங்களை சீனாவின் சைபர் தாக்குதல் குழு தாக்க முயன்றுள்ளது.
முறியடிப்பு
தெலுங்கானா அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் டிஎஸ் டிரான்ஸ்கோ மற்றும் டிஎஸ் ஜென்கோ ஆகிய மின் நிலையங்களை சீனாவின் சைபர் தாக்குதல் குழு தாக்க முயன்று இருக்கிறது. இந்தியாவில் சைபர் தாக்குதலை கண்டறியும் CERT எனப்படும் இந்தியாவின் கணினி அவசரநிலை பதில் குழு இதை முன்கூட்டியே கண்டறிந்து முறியடித்துள்ளது.
மாற்றம்
முறையான கண்காணிப்பு மூலம் இந்த சைபர் தாக்குதலை CERT முறியடித்துள்ளது. இதை தொடர்ந்து உடனடியாக இங்கு இருக்கும் கணினிகள் எல்லாம் சோதனை செய்யப்பட்டுள்ளது. டிஎஸ் டிரான்ஸ்கோ மற்றும் டிஎஸ் ஜென்கோ ஆகிய மின் நிலையங்களின் சர்வர்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. பணியாளர்களின் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது.
பாதுகாப்பு
இந்த சைபர் தாக்குதல் முயற்சி முறியடிப்பு காரணமாக இரண்டு மின் நிலையமும் பாதுகாப்பாக உள்ளதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. இந்த தாக்குதலை முன் கூட்டியே கண்டுபிடித்த காரணத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது தொடர்பாக விசாரணைகள் நடந்து வருகிறது என்று CERT அமைப்பு கூறியுள்ளது.