பள்ளிக்கு குழந்தையை அனுப்பும் ஏழை அம்மாவுக்கு ஆண்டுக்கு ரூ.15000.. ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு
ஹைதராபாத்: ஆந்திராவில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அம்மாக்களுக்கு ஆண்டுக்கு ரூ.15000 வழங்கப்படும் என 'அம்மா ஓடி' என்ற திட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
குழந்தைகளை அனுப்பும் அம்மாக்களுக்கு உதவித்தொகையாக அவரது வங்கி கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும்.
கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட இத்திட்டப்படி சுமார் 43 லட்சம் தாய்மார்கள் அல்லது பாதுகாவலர்களுக்கு நிதி உதவி வழங்க மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிஏஏ போராட்டத்தை கையாண்ட விதத்தால் கடும் அதிருப்தி.. யோகி அரசுக்கு அலகாபாத் ஹைகோர்ட் சரமாரி கேள்வி
அரசு பள்ளி
இத்திட்டத்தின்படி தனியார், அரசு, உதவி பெறும் அல்லது உதவி பெறாத பள்ளிகளில் இருந்தாலும் பள்ளியில் படிக்கும் (வகுப்பு 1-வகுப்பு 12) சிறார்களின் தாய்மார்கள் இந்தத் திட்டத்திற்கு தகுதியானவர்கள் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.
வெள்ளை ரேஷன் கார்டு
குழந்தைகள் பள்ளிகளில் 75 சதவீதம் வருகை பெற்றிருக்க வேண்டும், மேலும் அவர்களது குடும்பங்கள் வெள்ளை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களாக இருக்க வேண்டும். பள்ளிகளை விட்டு வெளியேறும் வரை பணம் பெண்களின் வங்கி கணக்கில் ஆண்டுதோறும் செலுத்தப்படும். அதன்பிறகு பணம் செலுத்துவது நிறுத்தப்படும். அரசு ஊழியர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர் இந்த திட்டத்தில் சேர தகுதியற்றவர்கள் ஆவர்.
கல்வியின் தரத்தை உயர்த்த
இத்திட்டத்தின் பின்னணி என்னவென்றால் மாநிலத்தில் பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், கல்வியின் தரத்தை உயர்த்துவதும் ஆகும்.
தன்னார்வ அமைப்புகள்
தெருக்களில் உள்ள அனாதைகள் மற்றும் குழந்தைகள், தன்னார்வ அமைப்புகள் மூலம் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்; இந்த அமைப்புகளுக்கு அரசே நிதி உதவி வழங்கும்.
6455 கோடி நிதி
இத்திட்டத்திற்காக 2019-20 நிதியாண்டில் அரசு ரூ .6,455.80 கோடியை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்திற்காக தங்கள் பட்ஜெட்டில் இருந்து பணத்தை ஒதுக்குமாறு மாநில அரசு மற்ற துறைகளை கேட்டுள்ளது என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக சமூக நல விடுதிகள், பழங்குடி நல அமைப்புகள், திட்டமிடப்பட்ட சாதி / திட்டமிடப்பட்ட பழங்குடியினர் கழகம், சிறுபான்மை நலத்துறை ஆகியவை குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி உள்ளன.
வெளிப்படைத்தன்மை
பயனாளிகளை அடையாளம் காண்பதில் வெளிப்படைத்தன்மையை பராமரிக்க, கிராம ஊராட்சி அலுவலங்களில் பார்வைக்கு வைக்கப்படும். பள்ளிக் கல்வியின் பிராந்திய கூட்டு இயக்குநர்கள் இந்தத் திட்டத்தை கண்காணிக்க அவ்வப்போது அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.