பரம் வீர் சக்ரா விருது வழங்கியிருக்க வேண்டும்.. கர்னல் சந்தோஷ் பாபு தந்தை ஆதங்கம்
ஹைதராபாத்: கல்வான் (கால்வன்) பள்ளத்தாக்கு மோதலில் தேசத்துக்காக வீர மரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு உயரிய ராணுவ விருதான பரம்வீர் சக்ரா விருது வழங்கியிருக்க வேண்டும் என அவரது தந்தை உபேந்திர ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
லடாக்கின் கிழக்கு பகுதியில் கடந்த ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் ஊடுருவலை முறியடித்ததில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். கர்னல் சந்தோஷ் பாபுதான் இந்திய வீரர்களுக்கு தலைமை ஏற்று நடத்திய ராணுவ அதிகாரி.
வீரமரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு மகா வீர் சக்ரா விருதை மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பாக கர்னல் சந்தோஷ் பாபுவின் தந்தை உபேந்திரா கூறியதாவது:
சந்தோஷ் பாபுவுக்கு மகாவீர் சக்ரா விருது வழங்கியதில் எனக்கு 100% திருப்தி இல்லை. சந்தோஷ் பாபுவின் வீரதீரத்துக்காக உயரிய ராணுவ விருதான பரம் வீர் சக்ரா வழங்கியிருக்க வேண்டும்.
கல்வான்: சீன மோதலில் வீரமரணம்- கர்னல் சந்தோஷ் பாபுக்கு மகாவீர் சக்ரா-தமிழக வீரர் பழனிக்கு வீர் சக்ரா
என் மகனும் அவரது ராணுவ சகாக்களும் வெறும் கைகளால் யுத்தம் நடத்தி சீன வீரர்களை கொன்றனர். இந்த யுத்தம் மூலம் இந்தியாவின் வலிமையை அவர்கள் நிரூபித்து வீரமரணம் அடைந்தனர்.
வழக்கமான ராணுவ சலுகைகளைத் தவிர நாங்கள் வேறு எதனையும் பெறவில்லை. இவ்வாறு உபேந்திரா கூறினார்.