தெலுங்கானாவில் அதிரடி திருப்பம்.. சிஏஏ ஆதரவு பேரணியில் அமித் ஷா உடன் பங்கேற்க போகும் பவன் கல்யாண்!
ஹைதராபாத்: மார்ச் 15 ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்கிறார். இந்த பேரணியில் அமித் ஷா உடன் முதல்முறையாக ஜனசேனா கட்சியின் (ஜே.எஸ்.பி) தலைவரும், தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவருமான பவன் கல்யாணும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மத அடிப்படையில் பாகுபாடு காட்டுவதாக கூறி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு, குடியுரிமை சட்டத்தால் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்று கூறி நாடு முழுவதும் சிஏஏ ஆதரவு பேரணிகளை நடத்தி வருகிறது.
சிஏஏவுக்கு எதிராக
இந்த சூழ்நிலையில் மத்திய அரசு இதுவரை இணக்கமாக இருந்து வந்த தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், திடீர் திருப்பமாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளார். ஏற்கனவே கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம், பீகார் உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தெலுங்கானாவும் இணைந்திருப்பது பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
சாய்னா நேவால்
இது ஒருபுறம் எனில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த முறை நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தனித்து நின்று மொத்தம் உள்ள 17 எம்பி தொகுதிகளில் இடங்களில் 4 இடங்களில் வென்று அசத்தியது. இதனால் அந்த மாநிலத்தில் பாஜகவை காங்கிரஸ்க்கு மாற்றான இயக்கமாக மாற்ற பாஜக அண்மையில் அதிரடி நடவடிக்களை எடுத்தது. இதன் ஒருபகுதியாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலை பாஜக தன் பக்கம் ஈர்த்தது.
சிஏஏ பேரணி
இந்த நிலையில் தெலுங்கானாவில் மக்கள் மத்தியில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரி சமிதி தலைவர் கேசிஆர், மற்றும் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி ஆகியோர் கடுமையான பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக சிஏஏ ஆதரவு பேரணியை வரும் மார்ச் 15ம் தேதி ஹைதராபாத்தில் நடத்த உள்ளது. இதற்கு ஹைதராபாத் போலீஸார் அனுமதி வழங்கி உள்ளனர்.
பவன் கல்யாண் பங்கேற்பு
இந்த பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உரையாற்ற உள்ளார். அத்துடன் அமித் ஷா உடன் முதல்முறையாக ஜனசேனா கட்சியின் (ஜே.எஸ்.பி) தலைவரும், தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவருமான பவன் கல்யாணும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இரு கட்சிகளும் புதிய கூட்டணியை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜக தலைவர் பேட்டி
இது தொடர்பாக ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கானா பாஜக தலைவர் கே.லக்ஷ்மன், "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மார்ச் 15 அன்று CAA க்கு ஆதரவாக ஒரு பெரிய பொதுக் கூட்டத்தில் உரையாற்ற வருகிறார். குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி மற்றும் எஐஎம்ஐஎம் கட்சிகளால் கூறப்படும் தவறான பிரச்சாரங்களை எதிர்கொள்ளும் முயற்சியில் இந்த பேரணி நடக்க உள்ளது. பாஜக உண்மைகளை மட்டுமே நம்பியிருக்கும்" இவ்வாறு கூறினார்.