தெலுங்கானாவில் பரபரப்பு.. காங்கிரஸ் எம்.பி. ரேவந்த் ரெட்டி கைது.. 14 நாள் சிறை.. காரணம் தெரியுமா?
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த, காங்கிரஸ் எம்.பி. ரேவந்த் ரெட்டி, போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 14 நாட்கள் அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்படி ஒரு நடவடிக்கை எடுக்க என்ன காரணம் என்ற பின்னணியை பார்த்தால் அசந்து போய்விடுவீர்கள்.
தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி செயல் தலைவரும், தொழில்துறை அமைச்சருமாக பதவி வகிப்பவர், கே.டி.ராமா ராவ். இவரது பண்ணைத் தோட்டம், ஜன்வாடா என்ற பகுதியில் உள்ளது.
இது ஓஸ்மாசாகர் ஏரி அருகே அமைந்துள்ளது. இங்கு கட்டிடங்கள் எழுப்ப அரசு தடை உள்ளது. ஆனால், நில உரிமையாளர்களை மிரட்டி 25 ஏக்கர் நிலத்தை, ராமா ராவ் இங்கே வாங்கியதாகவும், அங்கே கட்டிடம் கட்டுவதாகவும் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டினார். மார்ச் 2ம் தேதி, அவரும், சில காங்கிரஸ் தலைவர்களும் அங்கே சட்ட விரோத, கட்டுமானம் நடப்பதாக குற்றம்சாட்டி உள்ளே நுழைய முற்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, நைசாக ட்ரோன் மூலமாக அந்த பகுதியை மேலே இருந்து புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்தார், ரேவந்த் ரெட்டி. அந்த படங்களை மீடியாவுக்கு வெளியிட்டார். அதில், வீடு, நீச்சல் குளம் போன்றவை கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த நிலையில்தான், சந்திரசேகர ராவ் அரசின் காவல்துறை, இந்திய தண்டனைச் சட்டத்தின் 184, 187,188,287, 109, 120 (பி) பிரிவுகள் மற்றும் விமானச் சட்டத்தின் பிரிவு 5 ஏ ஆகியவற்றின் கீழ் பிரதான குற்றவாளியாக ரேவந்த் ரெட்டியை சேர்த்துள்ளது. சட்டவிரோதமாக ட்ரோன் பயன்பாடும் இந்த வழக்கில் அடங்கும். தனிநபர்களின் தனியுரிமையை மீறுவது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தில் ரேவந்த் ரெட்டி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. ஆனால் ஜாமீனுக்கு விண்ணப்பிப்பதை தவிர்த்துள்ளார், ரேவந்த் ரெட்டி. இதனிடையே, எதிர்க்கட்சிகள் குரல்வளை நெறிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முறைகேடுகளை வெளிக் கொண்டு வந்ததற்காக சிறையா என அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.