தெலுங்கானா பாணியில் ஆந்திராவிலும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தள்ளிவைப்பு! நள்ளிரவில் அதிரடி
ஹைதராபாத்: முதல்வர், அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை இந்த மாதம் தராமல் தள்ளிப்போடுவதாக ஆந்திர அரசு செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Recommended Video
நள்ளிரவில் வெளியிடப்பட்ட உத்தரவில், ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் நிலம் சாவ்னி கூறியிருப்பதாவது ஊரடங்கு உத்தரவு காரணமாக மாநிலத்தின் வருவாய் வரும் வழியிகள் அனைத்தும் முற்றிலும் வறண்டு போய் உள்ளது. எனவே அரசு ஊழியர்கள், எம்எல்ஏக்கள் உள்பட அனைவருக்கும் 10 முதல் 100 சதவீதம் வரை சம்பளம் இந்த மாதம் கிடைக்காது.
இதன்படி முதல்வர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 100 சதவீதம் இந்த மாதம் சம்பளம் வழங்கப்படாது. அதேநேரம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முதல் 3 ஆம் கிரேடு நிலையில் உள்ள அரசு ஊழியர்களின் சம்பளம் முறையே 50 சதவீதம் மற்றும் 60 சதவீதம் வரை இந்த மாதம் வழங்காமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பென்சன்தார்களுக்கும் பொருந்தும்.
10 சதவீதம் மட்டுமே
ஆந்திர மாநிலத்தில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்கள், அவுட்சோர்ஸ் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் புதிதாக பணிபுரியும் கிராமம் மற்றும் வார்டு செயலக ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் 90 சதவீதம் வழங்கப்படும். 10 சதவீத சம்பளம் மட்டும் பிடித்தம் செய்யப்பட்டு பின்னர் அதுவும் வழங்கப்படும்.
நிவாரணம் தரணும்
ஊரடங்கு காரணமாக அரசுக்கு வருவாய் வரும் வழிகள் அனைத்தும் வறண்டுவிட்டது. அத்துடன் கொரோனா வைரஸ் பிரச்சனையில் உள்ளவர்களை தொடர்புத் தடமறிதல், தனிமைப்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் கொரோனா வைரஸ் பிரச்சனையில் இருந்து வெளிவர தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், மருந்துகள், சுகாதார வசதிகள் போன்றவற்றை சுகாதாரத்துறைக்கு வழங்க வேண்டும். மேலும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கும் அதிக நிதி தேவைப்படுகிறது. ஆனால் ஊரடங்கு காரணமாக நிதி கிடைப்பது பாதிக்கப்பட்டுள்ளது. எனவேதான் அரசு ஊழியர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது" என தலைமைச் செயலாளர் விளக்கம் அளித்தார்.
சம்பளம் பிடித்தம்
தெலுங்கானா அரசு இதேபோன்ற முடிவை எடுத்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் ஆந்திராவில் சம்பளம் அளிப்பதை தள்ளிப்போடுவதாக அம்மாநில அரசு அறிவித்தது. தெலுங்கானா அரசு எம்எல்ஏக்கள் உள்பட மக்கள் பிரநிதிகளுக்கும் அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை சம்பளத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா அரசும் குறிப்பிட்ட அளவுக்கு அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைத்துள்ளது.
அதிரடியாக உயர்வு
கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்து தெலுங்கானா ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் கடுமையாக போராடி வருகின்றன, மகாராஷ்டீராவில் 325 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தெலுங்கானாவில் 92 பேருக்கும், ஆந்திராவில் 87 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 124 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது.