கொடுமை.. "என் அம்மா செத்துட்டாங்க.. போக முடியல.. 4 மாவட்டம்.. 40 செக் போஸ்ட்.. கண்ணீரில் சாந்தாராம்
தாயின் இறுதி சடங்கிற்குகூட போலீஸ் எஸ்.ஐ. ஒருவரால் செல்ல முடியவில்லை
ஹைதராபாத்: "அம்மா செத்துட்டாங்கன்னு போன் வந்தது... ஆனால் என்னால் போக முடியல.. 4 மாவட்டம், 40 செக்போஸ்டை தாண்டி போகணும்.. அப்படியே போனாலும் அங்கே நிறைய பேருடன் பேச வேண்டி வரும்... தொற்று ஏற்பட சான்ஸ் இருக்கு.. அதான் என் தம்பியையே இறுதிச் சடங்கு செய்ய சொல்லிட்டேன்.. அந்த இறுதிசடங்கை வீடியோ கால் பண்ணி அழுதபடியே பார்த்து கொண்டேன்" என்று துக்கம் தொண்டை அடைக்க சொல்கிறார் போலீஸ்காரர் சாந்தாராம்!
அசுர கொரோனா ஒவ்வொரு நாட்டையும், ஒவ்வொரு மாநிலத்தையும் பாடாய் படுத்தி வருகிறது.. இந்த வைரஸை தடுக்க மருத்துவர்கள் மட்டுமல்லாமல் காவல்துறையினரும் தங்களை இழைத்து கொண்டுள்ளனர்.
குடும்பங்கள், குழந்தைகளையும் மறந்து கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்... தொற்று அபாயம் இவர்களுக்கும் கூட உண்டு என்றாலும், உயிரையும் துச்சமென நினைத்து மக்கள் சேவையில் இறங்கி வருகின்றனர்.. அதேபோல, சுய விருப்பு, வெறுப்புக்கும் இடமில்லாமல் கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளனர். அந்த வகையில் நாம் அனைவரும் சல்யூட் வைக்க வேண்டியவர் சாந்தாராம் என்ற போலீஸ்காரர்!!
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்.. ரயில்வே போலீஸ் எஸ்ஐ.. இவர் கடந்த சனிக்கிழமை விஜயவடா ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.. அப்போதுதான் அந்த போன் வந்தது.. அதில் அவரது அம்மா சீதாமகாலட்சுமி உடம்பு சரியில்லாமல் இறந்துவிட்டார் என்ற தகவல் கிடைத்தது.. சீதாமகாலட்சுமிக்கு வயது 69 ஆகிறது.. விஷயத்தை கேள்விப்பட்டு இவருக்கு உடனே லீவும் தந்தார்கள்.. ஆனால் சாந்தாராம் தாயின் மரணத்துக்கு செல்லவில்லை.. இறுதி சடங்கிற்கும் செல்லவில்லை.
இதனால் இன்ஸ்பெக்டர் பங்கர்ராஜூ என்பவர், ஏன் அம்மா சாவுக்கு போகவில்லை என்று கேட்டார்.. அதற்கு சாந்தாராம், "சொந்த ஊருக்கு போகணும் என்றால் 4 மாவட்டம், 40 செக்போஸ்டுகளை தாண்டிதான் போகணும்.. அங்கே எல்லாரும் வந்திருப்பாங்க.. நான் போனால் அதிக மக்களுடன் பேச வேண்டி இருக்கும்... ஒருவேளை இதனால்கூட கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கு.. அதான் என் தம்பியையே என் அம்மாவின் இறுதி சடங்கை செய்ய சொல்லிட்டேன்.. அந்த இறுதிசடங்கினை செல்போனில் வீடியோ கால் மூலம் பார்த்து என்னை நானே சமாதானம் செய்துக்கிட்டேன்" என்றார்.
இந்த காரணத்தை கேட்டதும் இன்ஸ்பெக்டர் பங்கர்ராஜூ உறைந்து நின்றார்.. இதையே ஒரு விழிப்புணர்வாகவும் பயன்படுத்தி பேசினார்... அப்போது, "இப்படி ஒரு இக்கட்டான சூழலில்தான் நாங்க வேலை பார்த்துட்டு இருக்கோம்.. சாந்தாராமுக்கு லீவ் தந்தும் கொரோனா பரவலை எண்ணி இறுதி சடங்கிற்கு போகவில்லை.. தயவு செய்து எங்க நிலைமையை எல்லாரும் புரிஞ்சிக்குங்க.. இன்னும் 2 வாரத்துக்கு வீட்டிலேயே இருங்க.. நம்மளால கண்டிப்பா கொரோனா வைரஸை சமாளிக்க முடியும்" என்றார்.
Recommended Video
மருத்துவர்களுக்கு இணையாகவே காவல்துறையினரும் தங்கள் பங்களிப்பை இப்படி தந்துவருவது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.. ஊரடங்கு எதற்காக போடப்பட்டுள்ளது என்றுகூட தெரியாமல் இன்னமும் வெளியே நடமாடி கொண்டிருக்கும் சில மூடர்களுக்கு சாந்தாராமின் இந்த தியாக சம்பவம் ஒரு உதாரணமாக இருக்கட்டும்! கொரோனாவை விரட்ட சாந்தாராம் போன்ற போலீசார் தரும் விலை அதிகமானது! அது ஈடு இணையற்றது!