தெலுங்கானாவில் புதிதாக 8 பேருக்கு கொரோனா.. டெல்லியில் இருந்து ரயிலில் வந்ததால் அச்சம்
ஹைதராபாத்: இந்தோனேஷியாவில் இருந்து தெலுங்கானா மாநிலத்திற்கு வந்த 7 பேர் உள்பட 8 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 7 பேரும் டெல்லியில் இருந்து ரயில் மூலம் தெலுங்கானா வந்ததால் பலருக்கும் பரவி இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
Recommended Video
இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 136 ஆக இருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 35 உயர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளத.
நாட்டிலேயே அதிகபட்சமாக. மகாராஷ்டிராவில் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்ததாக கேரளாவில் 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.
சிபிஎஸ்இ பள்ளி தேர்வுகள், என்ஜினியரிங் நுழைவு தேர்வுகள் அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு
கர்நாடகாவில் 11 பேருக்கு
உத்தரப்பிரதேசத்தில் 16 பேரும் கர்நாடகாவில் 11 பேரும் கொரோனா தாக்கத்தால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். டெல்லியில் வெளிநாட்டவர் ஒருவர் உட்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தெலுங்கானாவில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது.
7 பேரும் ரயிலில் வந்தனர்
இந்நிலையில் இந்தோனேஷியாவில் இருந்து தெலுங்கானாவிற்கு வந்த இந்தோனேஷியர்கள் (மத அமைப்பினர்) 7 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 பேரும் டெல்லி வந்து அதன்பிறகு டெல்லியில் இருந்து ராமகுண்டத்திற்கு(தெலுங்கானா) சம்பார்க் கிராந்தி ரயிலில் மார்ச் 13ம் தேதி எஸ் 9 கோச்சில் வந்துள்ளார்கள். கரீம் நகரில் 3 நாட்கள் தங்கி பணியாற்றி உள்ளார்கள். அதன்பிறகு காய்ச்சல் அதிகரித்ததால் ஹைதராபாத்தில் உள்ள அரசு காந்தி மருத்துவமனையிக்கு பரிசோதனைக்கு வந்துள்ளார்கள். அவர்கள் 7 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இளைஞருக்கு கொரோனா
இதேபோல் ஸ்காட்லாந்தில் இருந்து தெலுங்கானாவிற்கு வந்த 22 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அவர் கடந்த மார்ச் 15ம் தேதி ஹைதராபாத் வந்தார் அவரை பரிசோதித்த போது காய்ச்சல் அதிகமாக இருந்தது. அதையடுத்து மருத்துவமனையில் வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தெலுங்கானாவில் 5 ஆக இருந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்து 13 ஆக அதிகரித்துள்ளது.
பலருக்கும் பரவி இருக்கும்
டெல்லியில் இருந்து தெலுங்கானாவிற்கு இந்தோனேஷியர்கள் 7 பேரும் ரயிலில் வந்துள்ளதால் கொரோனா வைரஸ் அந்த ரயிலில், அவர்கள் வந்த எஸ் 9 கோச்சில் உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தி இருக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. இதையடுத்து அந்த கோச்சில் வந்த அத்தனை பேரையும் கண்டுபிடித்து தனிமைப்படுத்தும் முயற்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இறங்கி உள்ளன. இதேபோல் கரீம் நகரில் 3 நாட்கள் தங்கியிருந்தததால் அவர்கள் யாருடன் எல்லாம் நெருங்கி பழகினார்களோ அவர்களையும் தனிமைப்படுத்த தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது. தெலுங்கானாவில் கொரானா அறிகுறி இருந்த காரணத்தால் இதுவரை 1683 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.