கொரோனா வைரஸ் எதிரொலி.. ஊத வேண்டாம்... குடிமகன்களுக்கு "குட் நியூஸ்"!
Recommended Video
ஹைதராபாத்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிரீத்அனலைசர் கருவி மூலம் சோதிக்க வேண்டாமென தொண்டு நிறுவனம் ஒன்று ஹைதராபாத் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலகையே அச்சுரத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் இதுவரை 360 க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 17,300 ஆகவும் உயர்ந்துள்ளது. இதில் 478 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
சீனாவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சீனாவில் இருந்து சொந்த ஊர் திரும்பும் இந்தியர்களுக்கு விமான நிலையத்தில் வைத்தே மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்களை தனி வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவை பொருத்தவரை கேரள மாநிலத்தில் மருத்துவ மாணவி ஒருவர் உட்பட 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பை மாநில பேரிடராக கேரள முதல்வர் பிணராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளாவை தவிர மற்ற மாநிலங்களில் கொரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை. இருந்தபோதிலும் அந்தந்த மாநில அரசு உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
உள்ளே வர கூடாது.. 3500 பேருடன் நடுக்கடலில் நிறுத்தப்பட்ட கப்பல்.. கொரோனாவால் ஜப்பானில் பகீர்!
இது ஒருபுறம் இருக்க கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, புதுவிதமான கோரிக்கையை ஹைதராபாத் காவல்துறைக்கு முன்வைத்துள்ளது தொண்டு நிறுவனம் ஒன்று. ஹைதாராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் வாடா எனும் தொண்டு நிறுவனம், ஹைதராபாத் காவல்துறை ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மனிதர்களுக்குத் தொற்றக்கூடிய கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவுகின்ற தொற்று நோயாக உள்ளது.
இருமல் மற்றும் தும்மலின் வழியாக ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுகிறது. நோய்த்தொற்று இருப்பவர்களிடம் நெருக்கமாக இருப்பது, தொடுவது, கை குலுக்குவது ஆகியவற்றாலும் பரவுகிறது. இதனால் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை சோதனையிடும் 'பிரீத்அனலைசர்' கருவி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்பள்ளதால், போக்குவரத்து காவலர்கள் பிரீத்அனலைசர் கருவியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் அந்நிறுவனம் காவல்துறை ஆணையருக்கு வலியுறுத்தியுள்ளது.
தொண்டு நிறுவனம் கூறுவதை போன்று பிரீத்அனலைசர் கருவி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பிருப்பதால், அந்த கருவியியின் பயன்பாட்டை தற்காலிகமாக தவிர்ப்பது குறித்து ஹைதராபாத் காவல்துறை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.