55 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் கொள்முதல் - ஒரு தடுப்பூசி விலை ரூ. 295
பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 55 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஹைதராபாத்: பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 55 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் தலா ரூ.295 என்ற விலைக்கு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 16.5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை இலவசமாக அளிக்க பாரத் பயோடெக் நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் 35.5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை அந்த விலைக்கு வாங்கவிருப்பதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 9 கோடி பேரை பாதித்துள்ளது. 7 கோடி பேர் குணமடைந்திருந்தாலும் 2 கோடி பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர். பல நிறுவனங்கள் போட்டி போட்டு தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகாலத்திற்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக இரண்டு கட்டமாக கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வரும் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
இதற்காக புனோவில் உள்ள சீரம் நிறுவனத்திடம் இருந்து 1.10கோடி கோவிஷீல்டு மருந்துகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஒரு டோஸ் 200 ரூபாய்க்கு மத்திய அரசுக்கு கொடுக்கிறது சீரம் நிறுவனம்.
கோவிஷீல்டு மருந்துகள் அந்தந்த மாநிலங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குளிர்பதன வசதியுடன் கூடிய மருந்து கிடங்கில் அவை சேகரிக்கப்பட்டு மாவட்டம் வாரியாக விநியோகம் செய்யப்பட உள்ளன. ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 55 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் தலா ரூ.295 என்ற விலைக்கு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக 16.5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை இலவசமாக அளிக்க பாரத் பயோடெக் நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் 35.5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை அந்த விலைக்கு வாங்கவிருப்பதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. பிப்ரவரி மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி நாட்டு மக்கள் அனைவருக்கும் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.