தென் மாநிலங்களில்.. N440K எனும் புதிய வகை கொரோனா - புட்டு புட்டு வைக்கும் CCMB ரிப்போர்ட்ஸ்
ஹைதராபாத்: தென் மாநிலங்களில் புதிய வகை கொரோனா வைரஸ் அதிகம் பரவுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும், கேரளா, மகாராஷ்டிராவில் தினம் அதிகரிக்கும் தொற்று அந்தந்த மாநில அரசுகளையும், மக்களையும் தொடர்ந்து பதட்டத்திலேயே வைத்துள்ளது.
கேரளாவில் தினமும் சராசரியாக 4000 - 5000 பேருக்கு கொரோனா தொற்றும், மகாராஷ்டிராவில் தினம் 5000 - 6000 பேருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டு வருகிறது. கொரோனாவை விரட்டுவதற்காக இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷில்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. எனினும், இவ்விரு மாநிலங்களில் தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மும்பையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள் காரணமாக, 1,305 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது
தீவிர கண்காணிப்பு
இந்நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த சி.எஸ்.ஐ.ஆர்-செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் (சி.சி.எம்.பி) விஞ்ஞானிகளின் ஆய்வுப்படி, கொரோனா வைரஸின் சில புதிய வகைகள் நாட்டின் சில மாநிலங்களில் அதிகமாகப் பரவி வருவதாகவும், இது குறித்த தீவிர கண்காணிப்பு தேவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாநிலங்களில்
இதுகுறித்து சிசிஎம்பி இயக்குனர் ராகேஷ் மிஸ்ரா வெளியிட்ட அறிக்கையில், "N440K (variant) தென் மாநிலங்களில் அதிகம் பரவுகிறது என்பதற்கான ஆதாரங்கள் இப்போது எங்களிடம் உள்ளன. அதன் பரவலை சரியாகப் புரிந்து கொள்ள தீவிரமான கண்காணிப்பு தேவை. இந்த புதிய வகை வைரஸை துல்லியமாகவும் சரியான நேரத்தில் கண்டறிவதன் மூலம், எதிர்வரும் பேராபத்தை நாம் முன்னரே தடுத்து நிறுத்திவிட முடியும்" என்று தெரிவித்துள்ளார்.
5000க்கும் மேற்பட்ட
என்னதான் நமக்கு கொரோனா தடுப்பூசிகள் உதவிகரமாக இருந்தாலும், மாஸ்க், கைகளை சுத்தமாக கழுவுதல், மற்றும் தனி மனித இடைவெளி போன்ற "social vaccine" தான் கொரோனாவுக்கு எதிரான மிகச் சிறந்த ஆயுதமாகும் என்று ஆய்வு தெரிவித்துள்ளது. விஞ்ஞானிகள் 5,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் வகைகளை பகுப்பாய்வு செய்து, அவை எவ்வாறு உருவாகியுள்ளன என்ற தங்கள் கண்டுபிடிப்புகளை முன்வைத்துள்ளனர்.
கண்காணிப்பே சிறந்த வழி
கொரோனாவின் புதிய வகை வைரஸ்கள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே தான் இருக்கும். இதைக் கட்டுப்படுத்த மிகச் சிறந்த வழி என்றால், எப்போதும் தீவிரமாக கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். தவிர, புதிய வகை கண்டறியப்பட்டால், உடனடியாக அவற்றை தடுக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.