தெலுங்கானாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு... சந்திரசேகர் ராவ் உத்தரவு
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருவதால் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அனைத்து மாநில அரசுகளும் ஈடுபட்டுள்ளன. மார்ச் 24-ம் முதல் நாடு தழுவிய அளவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அதனை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எழுந்துள்ளன.
பிரதமருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான முதலமைச்சர்கள் ஊரடங்கை இம்மாத இறுதி வரை மத்திய அரசு நீட்டிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். இதனிடையே தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஏப்ரல் 30-ம் தேதி வரை தெலுங்கானாவில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு வெளியிட்டுள்ளார்.
தெலுங்கானாவில் இதுவரை 503 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அதில் 393 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 93 பேர் கொரோனா தொற்றில் இருந்து நலம்பெற்று வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 14 பேர் கொரோனா பாதிப்பால் தெலுங்கானாவில் உயிரிழந்துள்ளனர். இதனால் நோயின் தீவிரம் மேலும் பரவுவதை தடுப்பதற்கு ஊரடங்கு என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் சந்திர சேகர் ராவ்.
கேம் சேஞ்சராக மாறும்.. தென் கொரியாவின் 'கொரோனா' மாடல்.. பிளாஸ்மா தெரபியை கையில் எடுத்த கேரளா!
இதனிடையே நாட்டிலேயே முதல்முறையாக ஊரடங்கை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என குரல் எழுப்பியவர் சந்திரசேகர் ராவ் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரமே இது தொடர்பாக தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.