ஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்
Recommended Video
அமராவதி: கிருஷ்ணா நதிக் கரையில், சந்திரபாபு நாயுடு அரசு கட்டிய 5 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களா, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் உத்தரவின் பேரில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு, 2017ஆம் ஆண்டில் கிருஷ்ணா நதிக்கரை ஓரம் அரசு செலவில் 5 கோடி ரூபாய் மதிப்பில் பிரஜா வேதிகா என்ற பங்களாவைக் கட்டினார்.
உண்டவல்லி என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள அந்தக் கட்டிடத்திற்கு அருகிலேயே சந்திரபாபு நாயுடுவின் மாளிகையும் உள்ளது. பிரஜா வேதிகாவை, அரசு மற்றும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக அவர் பயன்படுத்தி வந்தார். முக்கியக் கூட்டங்கள், செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சிகளும் அங்கு தான் நடக்கும்.
கிருஷ்ணா நதிக்கரையில் பங்களா
ஆனால், பிரஜா வேதிகாவும், சந்திரபாபு நாயுடுவின் மாளிகையும், கிருஷ்ணா நதிக்கரையில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சியாக இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வந்தது. தற்போது அக்கட்சி ஆட்சியைப் பிடித்து, ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராகியுள்ள நிலையில், பிரஜா வேதிகா உள்பட, கிருஷ்ணா நதிக்கரை ஓரம் கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு
இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் பிரஜா வேதிகா பங்களாவை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்து விட்ட ஜெகன் மோகன் ரெட்டி, சொகுசு பங்காளவை இடிக்க உத்தரவிட்டார்.
ஐரோப்பிய சுற்றுப்பயணம்
சந்திரபாபு நாயுடு விடுமுறைக்காக ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நேரத்தில் கட்டடத்தை இடிக்க முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு பிறபித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பிரஜா வேதிகா பங்களாவை தரைமட்டமாக்கும் பணி நடந்து வருகிறது.
பாதுகாப்பு குறைப்பு
முன்னதாக, சந்திர பாபு நாயுடுவின் குடும்பத்தினருக்கான பாதுகாப்பை ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அரசு குறைத்தது. ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடுவின் மகனும் முன்னாள் அமைச்சருமான நர லோகேஷுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் துப்பாக்கி ஏந்திய 4 பாதுகாவலர்கள் மட்டுமே தற்போது பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். சந்திரபாபு நாயுடுவின் மகனை தவிர அவரது குடும்பத்தில் உள்ள பிறருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பும் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.