ஆளுங்கட்சி பிரமுகரின் காரில் சடலம்.. "அடிச்சு கொன்றது இவர்தான்" உறவினர்கள் புகாரால் அதிர்ச்சி!
ஐதராபாத்: ஆந்திர பிரதேச மாநில சட்ட மேலவை உறுப்பினரின் காரில் அவரது முன்னாள் ஓட்டுநரின் சடலம் இருந்த நிலையில் அவரே டிரைவரை கொலை செய்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த எம்.எல்.சி அனந்தா உதய் பாஸ்கர், தனது முன்னாள் டிரைவர் சுப்பிரமணியத்தை அழைத்துச் சென்றதாக சுப்பிரமணியத்தின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
நள்ளிரவு 1 மணியளவில் வீட்டுக்கு வந்த எம்.எல்.சி, டிபன் வாங்க பைக்கில் செல்லும்போது விபத்தில் இறந்திவிட்டதாக கூறி டிரைவரின் சடலத்தைக் காட்டியுள்ளார்.
ஆளுங்கட்சி எம்.எல்.சி
ஆந்திர பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆனந்தா உதய் பாஸ்கர். இவர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மேல்சபை உறுப்பினராக உள்ளார்.
இவரிடம் சுப்பிரமணியம் என்பவர் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். சுப்பிரமணியம் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆனந்தாவிடம் வேலை பார்த்து வந்த நிலையில் சமீபத்தில் வேலையை விட்டு நின்றுள்ளார். ஆனாலும், அவ்வப்போது சில வேலைகளுக்காக சுப்பிரமணியத்தை ஆனந்தா அழைப்பார் எனக் கூறப்படுகிறது.
இரவில் வந்து
இந்நிலையில் நேற்று மாலை சுப்பிரமணியம் வீட்டிற்குச் சென்ற சட்டமேலவை உறுப்பினர் ஆனந்தா, சுப்பிரமணியத்தை தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு மேல் திரும்பி வந்த ஆனந்தா, 'டிபன் வாங்குவதற்காக பைக்கில் சென்றபோது சுப்பிரமணியன் சாலை விபத்தில் அடிபட்டு இறந்துவிட்டார்' எனக் கூறி தன்னுடைய காரில் இருந்த சுப்பிரமணியம் உடலை அவருடைய குடும்பத்தினரிடம் காட்டியுள்ளார்.
அதிர்ச்சி
இதனால் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியத்தின் குடும்பத்தினர் ஆனந்தாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்தான் சுப்பிரமணியத்தை கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையடுத்து ஆளுங்கட்சி எம்.எல்.சி ஆனந்தா அங்கேயே காரை விட்டுவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சுப்பிரமணியம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
20 ஆயிரம் கடன்
சுப்பிரமணியம், ஆனந்தாவிடம் 20,000 ரூபாய் கடனாகப் பெற்றதாகவும் அந்தப் பணத்தை திரும்பக் கேட்டு ஆனந்தா தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். பணம் தராததாலேயே அவரை அழைத்துச் சென்று கொன்றுவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
சுப்பிரமணியத்தின் கை, கால்களை அவர் தாக்கி உடைத்துள்ளதாகவும் குடும்ப உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தங்களுக்கு நீதி வழங்கவும், தங்கள் மகனைக் கொன்ற எம்.எம்.எல்.சி மீது நடவடிக்கை எடுக்கவும் உயிரிழந்தவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வழக்குப்பதிவு
நடந்தது விபத்து என்றால், ஆளுங்கட்சி எம்.எல்.சி ஆனந்தா, சடலத்தை காரில் கொண்டு வந்தது ஏன் என்றும் கேள்வி எழுந்துள்ளது. இந்த மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆனந்தாவை தேடி வருகின்றனர். இந்தச் சம்பவத்திற்கு எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறது.
அக்கட்சியின் தேசிய செயலாளரும் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நரா லோகேஷ், ஆனந்தாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.