இப்படியும் ஒரு மருத்துவமனை.. கொரோனா சிகிச்சை பெற்ற இந்தியருக்கு ரூ 1.52 கோடி பில்.. அதிரடி தள்ளுபடி
ஐதராபாத்: தெலங்கானாவில் இருந்து கட்டிட வேலைக்கு துபாய் சென்றவருக்கு கொரோனா தொற்று ஏற்பட, இதையடுத்து அங்கு இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டிஸ்சார்ஜ் ஆகும் நேரத்தில் மருத்துவமனைக்கு இவர் செலுத்த வேண்டிய ரூ. 1.52 கோடியை மருத்துவமனையே ஏற்றுக் கொண்டது.
தெலங்கானாவைச் சேர்ந்தவர் 42 வயது ஒட்லா ராஜேஷ். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டிட வேலைக்காக துபாய் சென்று இருந்தார். சமீபத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 80 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டார். டிஸ்சார்ஜ் ஆகும்போது, மருத்துவமனைக்கு ரூ. 1.52 கோடி பில் தொகை செலுத்த வேண்டியது இருந்தது. இவரால் செலுத்த முடியவில்லை.
இந்த விஷயம் வெளிநாட்டு வாழ் இந்தியரான குண்டெல்லி நரசிம்மாவுக்கு தெரிய வந்தது. இதுகுறித்து துபாயில் இருக்கும் இந்திய தூதரகத்தின் தன்னார்வலரான சுமந்த் ரெட்டிக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து மற்றொரு தன்னார்வலரான அசோக் கொடேச்சாவுக்கு ரெட்டி தகவல் கொடுத்தார். இவர்கள் இருவரும் இணைந்து பின்னர் துபாயில் இருக்கும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு தூதர் ஹர்ஜீத் சிங்கிடம் தெரிவித்தனர். இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகத்துக்கு ராஜேஷின் நிலைமை குறித்து விவரித்து சிங் கடிதம் எழுதினார். கடிதத்தை ஏற்றுக் கொண்ட மருத்துவமனை நிர்வாகம் பில் தொகையையும் ஏற்றுக் கொண்டது.
இதைத் தொடர்ந்து விமான டிக்கெட் எடுத்து ஐதராபாத்துக்கு ராஜேஷை தூதர் சிங் அனுப்பி வைத்தார். ஐதராபாத்துக்கு புதன் கிழமை வந்து சேர்ந்த ராஜேஷ், அவரது கிராமத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படவில்லை. 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் அனுப்பி வைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருக்கிற அக்கப்போரில் இது தேவையா.. "கஞ்சா"வை கையில் எடுத்த வனிதா.. வெகுண்டெழுந்த சூரியா தேவி!
ராஜேஷ் மனைவி விவசாய கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகள் பி.காம்., படிக்கிறார். மகன் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
Recommended Video
துபாய் மருத்துவமனையின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா சோதனைக்கு பெரிய அளவில் பணம் பறிக்கும் நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்தவருக்கு துபாய் மருத்துவமனை கருணை காட்டி இருப்பதும், அதற்கான நடவடிக்கை எடுத்த தூதரின் செயலும் பாராட்டத்தக்கவையே.