ஹைதராபாத்தில் மீண்டும் கொட்டித் தீர்த்த கனமழை- தாழ்வான பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றம்
ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் சனிக்கிழமை மாலை கனமழை கொட்டித் தீர்த்தது. இதனையடுத்து ஹைதராபாத் நகரில் தாழ்வான பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
ஹைதராபாத்தில் வரலாறு காணாத கனமழை கொட்டியதால் சாலைகளில் காட்டாறு போல மழைவெள்ளம் பாய்ந்தோடியது. ஹைதராபாத் நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. ராணுவத்தினர் பல இடங்களில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
ALERT : Innundation of low lying colonies Hafiz baba nagar, Phoolbagh, Omar Colony, Indra Nagar, Shivaji Nagar, Rajiv Nagar. Please cooperate with Police in evacuation exercise. ACP Santoshnagar, ACP Falaknuma, Insp Chandrayangutta, Insp Madannapet, Insp Chatrinaka are present pic.twitter.com/xwErATGdMk
— Anjani Kumar, IPS, Stay Home Stay Safe. (@CPHydCity) October 17, 2020
தொடரும் மழை
இந்த நிலையில் சனிக்கிழமை கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது. அப்பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பாக ஹைதராபாத் போலீஷ் கமிஷனர் அன்ஜனி குமார் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ பதிவில், ஹபீஸ் பாபா நகர், பூல்பாக், ஒமர் காலனி, இந்திரா நகர், சிவாஜிநகர், ராஜீவ் நகர் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
157 மி.மீ மழை
தெலுங்கானாவின் மல்காஜ்கிரி மாவட்டத்தில் சனிக்கிழமையன்று 157.3 மி.மீ மழை பதிவாகி இருந்தது. ஹைதராபாத்தின் உப்பல் அருகே பந்தல்குடா பகுதியில் 153 மி.மீ மழை பதிவாகி இருந்தது. மழைவெள்ள மீட்புப் பணிகளில் பேரிடர் மீட்புக் குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.
கனமழைக்கு 79 பேர் பலி
கனமழையால் கோல்கொண்டா கோட்டை சுவர்கள் இடிந்துவிழுந்தன. இதனிடையே மலாகாபேட் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். ஆர்கே பேட் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 5வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். தெலுங்கானாவில் மழைவெள்ளத்துக்கு இதுவரை மொத்தம் 79 பேர் பலியாகி உள்ளனர்.
ரூ5000 கோடி அளவு சேதம்
மழைவெள்ள சேதம் குறித்து தெலுங்கானா அரசு மதிப்பிட்டு வருகிறது. பல லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதுவரை சுமார் ரூ5,000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்கின்றன தெலுங்கானா அரசு வட்டாரங்கள்.