பாபர் மசூதியை இடித்த பிறகு முஸ்லீமாக மாறிய மாஜி கரசேவகர் பல்பீர் சிங் திடீர் மரணம்.. போலீஸ் விசாரணை
ஹைதராபாத்: 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கரசேவகர்களால் இடித்து தள்ளப்பட்டது. அப்போது ஒரு படம் அனைத்து பத்திரிக்கைகளிலும் முதல் பக்கத்தில் இடம் பிடித்தது..
இரண்டு கைகளையும் விரித்தபடி ஒரு இளைஞர் பாபர் மசூதியின் மேல் ஏறி நிற்பது போலவும், அவரது ஒரு கையில் வாள் போன்ற ஒரு ஆயுதம் இருப்பது போலவும் இருந்த அந்த புகைப்படம் உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
பாபர் மசூதி மீது முதலில் ஆயுதத்தை இறக்கி அதை இடிக்க தொடங்கியது இந்த நபர் தான் என்று பின்னர் தெரிய வந்தது. அவரது பெயர் பல்பீர் சிங். தீவிர கர சேவகர்.
பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிக்கு... லோக்ஆயுக்தாவில் துணை தலைவர் பதவி
குடும்பத்தினர் கண்டித்தனர்
ஆனால், இந்த சம்பவத்திற்கு பிறகு அவரது மனது மாறியது . குற்றவுணர்ச்சி அவரை துரத்திக் கொண்டே இருந்தது. இதற்கு முக்கிய காரணம், அவரது குடும்பம் மற்றும் நட்புச் சூழல். இத்தனைக்கும் அவர் உடைத்து கொண்டு வந்த இரண்டு செங்கற்கள் அப்போது பானிபட்டில் உள்ள சிவசேனா அலுவலகத்தில் வைக்கப்பட்டு இவரை ஒரு ஹீரோ போல வலதுசாரி இயக்கங்கள் கொண்டாடின. ஆனால், மதச்சார்பற்ற பாரம்பரியம் கொண்ட இந்து குடும்பத்திலிருந்து வந்தவர் பல்பீர் சிங். "பாபர் மசூதியை இடித்ததை எனது தந்தை கண்டித்தார். வீட்டை விட்டே ஒதுக்கி வைத்தனர். வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து மனைவியை அழைத்தேன். ஆனால் அவரும் எனக்கு துணையாக வரவில்லை. எனவே நான் தனியாக அங்கிருந்து வெளியேறினேன்." என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார் பல்பீர் சிங்.
நாடு முழுக்க கலவரம்
பாபர் மசூதி இடிப்பால் நாடு முழுவதும் கலவரம் வெடித்தது என்ற செய்தியை பின்னர் இவர் அறிந்தார். பல மக்கள் கொலை மற்றும் பாதிப்புக்குள்ளாக இந்த சம்பவம் ஒரு காரணமாகிவிட்டதே என்று குற்ற உணர்ச்சி துரத்தியுள்ளது பல்பீர் சிங்கை. பல்பீர் சிங் தந்தை இறந்த நிலையில் கூட இவரை அவரது குடும்பம் ஏற்கத் தயாராக இல்லை. பல்பீரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வேண்டாம் என்று விரட்டிவிடப்பட்டார்.
குற்ற உணர்ச்சி
இதற்கிடையில், பல்பீர் சிங் உடல்நிலை பாதிக்கப்பட்டது, மனதில் பதற்றம் ஏற்பட்டது. பாபர் மசூதி இடிப்பில் பல்பீருடன் பங்கேற்ற அவரது நெருங்கிய நண்பர் யோகேந்திர பால் இஸ்லாத்திற்கு மாறினார் என்பதை அறிந்தார் பல்பீர். யோகேந்திரா பாலை, சந்தித்து விவரம் கேட்டார். அவர்தான், இந்த குற்ற உணர்ச்சியிலிருந்து மீள வேண்டுமானால் இஸ்லாம் மத அறிஞரான மவுலானா சித்திக்கை சந்தித்து விளக்கம் கேட்க யோகேந்திர பால் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்லாமுக்கு மாறினார் பல்பீர் சிங்
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் மவுலானா சித்திக்கை சந்தித்து தனது பிரச்சினைகள் பற்றி பேசினார் பல்பீர் சிங். அவரிடம் இதற்கு தீர்வு என்ன என்று கேள்வி எழுப்பினார். அனைத்து விஷயங்களையும் கேட்டறிந்த மவுலானா, அவருக்கு குர்ஆன் வரிகளை படித்து காட்டினார். ஒரு வழிபாட்டுத் தலத்தை இடிப்பது எவ்வளவு மோசமான செயல் என்பதை அப்போது உணர்ந்த பல்பீர் சிங் இஸ்லாம் மதத்தைத் தழுவி தனது பெயரை முகமது அமீர் என மாற்றிக் கொண்டார். 1993 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி மவுலானா கலீம் சித்திக் முன்னிலையில் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டார் பல்பீர் சிங். பாபர் மசூதியை இடித்த கரசேவகர், அடுத்த ஆண்டே இஸ்லாம் மதத்துக்கு மாறியது அப்போது மிகப் பரபரப்பாக பேசப்பட்டது.
100 மசூதிகளை கட்ட திட்டம்
இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தை இடித்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி காரணமாக அதற்கு பரிகாரம் தேடுவதற்கு முடிவு செய்தார் முகமது அமீர். ஒரு மசூதியை இடித்ததற்கு பரிகாரமாக 100 மசூதிகளை கட்ட வேண்டும் என்பது அவரது உறுதி மொழியாக இருந்தது. கடந்த 26 ஆண்டுகளில் அவர் 91 மசூதிகளை கட்டுவதற்கு உதவி செய்துள்ளார். நிறைய மசூதிகளை பராமரிப்பதற்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்.
வீட்டில் மரணம்
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஓல்ட் சிட்டி ஹபிஸ் பாபா நகர் பகுதியில் முகமது அமீர் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் வீட்டில் இருந்து ஏதோ துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு முகமது அமீர் உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.
சந்தேகம்
இதுபற்றி காவல் துறையினர் கூறுகையில் முகமது அமீர், மரணத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை. அவரது குடும்பத்தினர் சார்பில் இந்த மரணம் தொடர்பாக மர்மம் இருப்பதாக புகார் வழங்கப்பட்டால் பிரேத பரிசோதனை செய்து அது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறையை தயாராக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தனை மசூதிகளை கட்டுவதற்கு முகமது அமீர் உதவி செய்தாலும் அவர் தனியாக ஒரு வாடகை வீட்டில்தான் இருந்துள்ளார்.