ஸ்டாலின் வீட்டுக்கு வந்து கேசிஆர் டீ சாப்பிட்டதெல்லாம் வீணாப் போச்சே.. குண்டைப் போட்ட எக்ஸிட் போல்!
Recommended Video
ஹைதராபாத்: எக்ஸிட் போல் முடிவுகளைப் பார்த்தால் 3வது அணிக்கான வாய்ப்புகளே இல்லை என்று ஊகிக்க முடிகிறது. இதனால் 3வது அணிக்காக துடியாத் துடித்துக் கொண்டிருந்த தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் பெரும் அதிருப்தியிலும், ஏமாற்றத்திலும் மூழ்கியுள்ளார்.
மொத்தமாக எக்ஸிட் போல் முடிவுகளை ஏற்காவிட்டாலும் கூட ஓரளவு இவை சாத்தியமாக வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது. எனவே பாஜக தனித்தோ அல்லது கூட்டணியாகவோ பெரும்பான்மை பலத்தைப் பெற வாய்ப்புள்ளது. எனவே 3வது அணிக்கான வாய்ப்பு என்பது சுருங்கிப் போய் விட்டது என்பதே அரசியல் நிபுணர்களின் கருத்தாகும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்கும் என்பது நிச்சயம் கேசிஆருக்கு கசப்பான செய்தியாகவே இருக்க முடியம். காரணம், அவர் அத்தனை முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். எல்லாம் தற்போது நிராசையாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
தமிழிசையை தோற்கடித்து முதல் முறையாக லோக்சபா எம்பியாகிறாரா திமுகவின் கனிமொழி?
டிஆர்எஸ்ஸுக்கு ஆறுதல்
தெலங்கானா மாநிலத்தில் கேசிஆரின் டிஆர்எஸ் கட்சி அதிக இடங்களை வெல்லும் என்பது அவருக்கு ஆறுதலான செய்திதான். தெலங்கானாவில் காங்கிரஸ், பாஜகவுக்கு பேரடி கிடைக்கும் என்பதும் கூட எதிர்பார்த்த ஒன்றுதான். அதேசமயம், தேசிய அளவில் கேசிஆருக்கான முக்கியத்துவம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்பது அக்கட்சிக்கு நெருக்கடியானது.
கனவு தகர்ந்தது
மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாத கூட்டணியை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்பதே கேசிஆரின் கனவாக இருந்தது. அதில் தான் துணை பிரதமராக வேண்டும் என்பதும் அவரது இன்னொரு கனவாக இருந்தது. ஆனால் இதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தெரிகிறது.
ஸ்டாலினுடன் சந்திப்பு
3வது அணி ஆசையுடன் மமதா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், நவீன் பட்நாயக், பினராயி விஜயன், தேவே கெளடா, ஜெகன் மோகன் ரெட்டி என பலரையும் பார்த்து வந்தார் கேசிஆர். ஆனால் இவர்களில் பலரும் இவருக்கு ஒத்துழைக்க முன்வரவில்லை. குறிப்பாக ஸ்டாலின் நிராகரித்து விட்டார். இருந்தாலும் நம்பிக்கையுடன் இருந்து வந்தார் கேசிஆர்.
வாய்ப்பு இருக்கு
தேசிய அளவில் 3வது அணிக்கான வாய்ப்புகள் சுருங்கி விட்டாலும் கூட தெலங்கானாவில் டிஆர்எஸ் பெரும் வெற்றியைப் பெறும் என்பதும், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு வீழ்ச்சியைச் சந்தித்து, ஜெகன் மோகன் ரெட்டி எழுச்சி பெறவுள்ளார் என்பதும் கேசிஆருக்கு ஆறுதலான விஷயம்தான். எனவே தங்களுக்கான வாய்ப்புகள் முற்றிலுமாக இல்லாமல் போய் விட்டதாக கேசிஆரும், டிஆர்எஸ்ஸும் நினைக்கத் தேவையில்லை என்பதே நிதர்சனம்.
இறுதி முடிவுகளில் கேசிஆருக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ரிசல்ட் வந்தால் அது அவரது கனவுக்கு மீண்டும் உயிர் கொடுக்க உதவும். பார்க்கலாம்.