எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை குலைக்கும் நோக்குடன் எக்ஸிட் போல் வெளியீடு: மொய்லி குற்றச்சாட்டு
ஹைதராபாத்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் உள்நோக்கம் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி குற்றம் சாட்டியுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான அனைத்து கட்ட வாக்குப்பதிவும் கடந்த 19ந் தேதி நிறைவுற்றது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை செய்தி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கே சாதகமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில்,"தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மூலமாக பங்கு சந்தையை ஏற்றம் பெற வைக்க முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியாக தெரிகிறது.
மேலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை குலைப்பதற்கான முயற்சியாக இருக்கும். உண்மையில் கள நிலவரத்தை இந்த கருத்துக் கணிப்புகள் எதிரொலிப்பதாக இல்லை.
இந்த கருத்துக் கணிப்புகளை நடத்திய நிறுவனங்களே இப்போது பல்வேறு தவறுகள் இருப்பதாக தெரிவித்து பின்வாங்கி இருக்கின்றன. மேலும், கருத்துக் கணிப்புகளில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்ற தகவல் உள்நோக்கம் கொண்டது.
இந்த கருத்துக் கணிப்புகள் பங்கு சந்தை வர்த்தகத்தை ஊக்கப்படுத்தி, பலர் ரூ.4.5 லட்சம் கோடி முதல் ரூ.5 லட்சம் கோடி வரை முதலீட்டாளர்கள் பயன் பெறுவதற்கான வழிமுறையாகவே தெரிகிறது என்று குற்றம் சாட்டி உள்ளார்.
கடந்த திங்கட்கிழமை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகிய பின்னர் பங்குச் சந்தை தடாலடியாக ஏற்றம் பெற்றதுடன், மும்பை பங்குச் சந்தை 1,422 புள்ளிகளை தொட்டது. இதனால், முதலீட்டு மதிப்பு ரூ.5.33 லட்சம் கோடியாக உயர்ந்ததையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மோடிக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைப்பது சாத்தியமா என்ற கேள்விக்கு," எங்களுக்கு பொது எதிரி மோடி. தேசிய முற்போக்கு கூட்டணியில் இல்லாத பெரும்பாலான கட்சிகள் அவரால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் சாத்தியக்கூறுகள் உள்ளன. அவர்கள் பாஜகவுடன் இணைய மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்க்கட்சியிலிருந்து பிரதமரை தேர்வு செய்வது பெரிய சிரமம் இருக்காது. காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், பிரதமர் பதவியை விட்டுத் தருமா என்ற கேள்விக்கு, தேர்தல் முடிவுக்கு பின்னர் அ்துகுறித்து நாளை பார்க்கலாம், என்றும் தெரிவித்தார்.