கேசிஆர் வச்ச குறி தப்பாது.. மீண்டும் தெலுங்கானாவை கைப்பற்றுகிறார்
மீண்டும் கேசிஆர் ஆட்சியை பிடிப்பார் என கூறப்படுகிறது.
ஹைதராபாத்: முன்கூட்டியே சட்டசபையைக் கலைத்து விட்டு தேர்தலை நடத்துவது என்று கே. சந்திரசேகர ராவ் எடுத்த முடிவு அவருக்கு சாதகமாகவே வந்துள்ளது என்பது எக்சிட் போல் முடிவுகள் மூலம் தெரிய வருகிறது. தெலுங்கானாவில் மீண்டும் கேசிஆரே ஆட்சியைப் பிடிப்பார் என்று பெரும்பாலான எக்சிட் போல் முடிவுகளும் கூறியுள்ளன.
119 உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கானா சட்டசபையின் ஆயுள் காலம் முடிவதுற்குள்ளாகவே அதனைக் கலைக்கும் முடிவை எடுத்தார் கேசிஆர்.
இதனால் அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியம் ஏற்பட்டது. அவர் பெரும் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்று அனைவரும் கணித்தனர். இது பாதகமாக போகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
குஷியில் உள்ளனர்
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கேசிஆருக்கே மீண்டும் வெற்றி என்று எக்சிட் போல் கணிப்புகள் கூறியுள்ளன. மொத்தம் வந்த 11 எக்சிட் போல்களில் பாதிக்கும் மேலானவை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என கணித்துள்ளன. இது கேசிஆர் தரப்பை குஷிப்படுத்தியுள்ளது.
பாஜக - 5
மொத்த எக்சிட் போல்களின் சராசரியையும் பார்த்தால் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் கேசிஆர் கட்சிக்கு 67 இடங்கள் கிடைக்கலாம். இது மெஜாரிட்டியான 60 ஐ விட அதிகமாகும். அதேபோல காங்கிரஸ் - சந்திரபாபு நாயுடு கூட்டணிக்கு 39 இடங்கள் கிடைக்கலாம். தெலுங்கானாவில் பாஜகவுக்கு 5 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாம்.
ஆட்சி அமைப்போம்
அதேபோல மற்ற கட்சிகளுக்கு 8 இடங்கள் வரை கிடைக்கும் என கருத்துக் கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது. இருப்பினும் இந்த கருத்துக் கணிப்புகளை நிராகரித்துள்ள காங்கிரஸ் கட்சி தங்களது கூட்டணிக்கு 80 இடங்கள் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது. அரசுக்கு எதிரான அலை இங்கு நிலவுகிறது. எனவே நாங்கள் ஆட்சியமைப்போம் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
வாக்கு வித்தியாசம்
கடந்த சட்டசபைத் தேர்தலில் டிஆர்எஸ் 63 இடங்களை வென்றது. காங்கிரஸ், 21, சந்திரபாபு நாயுடு 15 என வெற்றி பெற்றனர். கடந்த தேர்தலில் கட்சிகளுக்கு கிடைத்த வாக்கு விகிதாச்சாரமே இந்த தேர்தலிலும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
11-ம் தேதி தெரியும்
தெலுங்கானாவில் காங்கிரஸ் - நாயுடு கூட்டணி தோல்வியுற்றால், தேசிய அளவில் அவர்கள் திட்டமிட்டு வரும் மாபெரும் கூட்டணியின் கனவுகளில் பாதிப்பு ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படி இருந்தாலும் 11ம் தேதி அனைத்தும் தெரிந்து விடும். அதுவரை பொறுத்திருக்க வேண்டியதுதான்.