வேளாண் மசோதாக்கள் சர்க்கரை தடவிய மருந்து...தெலங்கானா முதல்வர் விமர்சனம்!!
ஹைதராபாத்: வேளாண் மசோதாக்கள் மூலம் விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் சர்க்கரை தடவிய மருந்துதானே தவிர வேறு ஒன்றுமில்லை. இவை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும்தான் பயனளிக்கும் என்று தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் நேற்று ராஜ்ய சபாவில் அமளியில் ஈடுபட்டனர். திமுக எம்பி திருச்சி சிவாவும் கடுமையாக தனது வாதங்களை எடுத்து வைத்து இருந்தார்.
திருச்சி சிவா பேசுகையில், ''உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற் றெல்லாம்; தொழுதுண்டு பின்செல் பவர்'' என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசி இருந்தார். முன்பு விவசாயிகளை நம்பி நாம் இருந்தோம். இன்று அவர்கள் மற்றவர்களை நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
இந்த மசோத்தாக்களை ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வரவேற்று இருக்கும் நிலையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எதிர்த்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ''நாட்டின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்கலாம் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த மசோதாவின்படி வணிகர்கள் நாட்டின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று விளை பொருட்களை வாங்கலாம். ஆனால் இவர்களது கூறுவது போல, சிறிய விவசாயிகளால் தங்களது உற்பத்தி பொருட்களை எப்படி நாட்டின் தொலைவில் இருக்கும் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்க முடியும். இது சாத்தியமில்லை. நல்ல விலைக்கு இவர்களால் விற்க முடியுமா.
இந்த மசோத்தாக்கள் வேறு ஒன்றும் இல்லை. சர்க்கரை தடவிய மருந்து. இந்த மசோதாக்களால் விவசாயிகளுக்கு எந்த வகையிலும் பயன் இல்லை. கார்ப்பரேட்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவர்கள் நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று விளை பொருட்களை வாங்க முடியும். தனியார் வணிகர்களை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.
தடுமாறுகிறதா அதிமுக.. திமுக மீது முதல்வர் ஆவேசம்.. ராஜ்யசபாவில் மத்திய அரசு மீது பாய்ச்சல்.. ஏன்?
விவசாயிகள், விவசாயம் சார்ந்த துறைகள், விவசாயிகளின் நலன் என்று அனைத்துக்கும் எதிராக இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன'' என்றார்.
விவசாயிகள் உற்பத்தி மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா கடந்த காலத்தில் அரசாங்கம் அறிவித்த அவசர சட்டங்களை மாற்றுவதற்காக கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த மசோதா விவசாயிகளுக்கு எந்த கெடுதலும் ஏற்படுத்தாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்து வருகிறது. விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு நல்ல குறைந்தபட்ச விலை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.