தலைவிரித்தாடும் லஞ்சம்.. 25 ஏக்கரை மீட்க மனைவி, இரு குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் விவசாயி
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் 25 ஏக்கர் நிலத்தை மீட்டு தர அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க மனைவி, இரு குழந்தைகளுடன் விவசாயி ஒருவர் பிச்சை எடுத்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ராயலசீமா பகுதியில் கர்நூல் மாவட்டத்தில் உள்ள மோத்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மான்யம் வெங்கடேஸ்வருலு என்கிற ராஜூ. இவருக்கு 25 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை இவரது உறவினர்கள் சட்டவிரோதகமாக ஆக்கிரமித்துள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து ராஜூ வருவாய் துறை அதிகாரிகளை சந்தித்து தங்களது நிலத்தை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்தார்.அதற்கு அந்த அதிகாரியோ நிலத்தின் பத்திரம் மாவட்ட ஆட்சியரிடம் உள்ளது. எனவே அதை மீட்க வேண்டுமானாலும் லஞ்சம் கொடுத்தால்தான் முடியும் என கூறிவிட்டாராம்.
கையை விட்டு போய்விடும்
இதனால் பிழைக்க வழியின்றி ராஜூ அவதிப்பட்டு வருகிறார். லஞ்சம் கொடுக்கவும் தன்னிடம் பணம் இல்லாததால் நிலம் எங்கே கையை விட்டு போய்விடுமோ என்ற கவலையில் இருந்தார்.
காசு கொடுங்கள்
இந்நிலையில் நிலத்தை எப்படியாயினு்ம மீட்க வேண்டும் என்பதற்காக கழுத்தில் ஒரு பேனர்கள், விளம்பரத் தட்டிகளை வைத்துக் கொண்டு தனது மனைவி , இரு குழந்தைகளுடன் பிச்சை எடுத்து வருகிறார். அப்போது அவர் கூறுகையில் எனக்கு ஏதாவது காசு கொடுங்கள்.
25 ஏக்கர் நிலம்
இந்த காசை வைத்து நான் சாப்பிடுவதற்காக கேட்கவில்லை. எனது 25 ஏக்கர் நிலத்தை மீட்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கவே பிச்சை எடுக்கிறேன். லஞ்சம் கொடுத்தால்தான் எல்லா பணிகளும் அரசு அலுவலகங்களில் நடக்கும். நான் பணத்தை செலுத்தாவிட்டால் எனது நிலத்தை இழந்துவிடுவேன் என கூறினார்.
காவல் துறை
இது குறித்து கர்னூல் மாவட்ட ஆட்சியர் எஸ் சத்யநாராயணா கூறுகையில் ராஜூவின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. வருவாய் துறை மீது அவதூறு கூறும் ராஜூ மீது வழக்கு பதிவு செய்யுமாறு காவல் துறையில் புகார் அளித்துள்ளோம். நிலத்தகராறு என்றால் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கலாமே என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.