இந்தியாவிலுள்ள எல்லாருமே இந்துக்கள்தான்.. ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு
ஹைதராபாத்: ஆர்எஸ்எஸ் அமைப்பை பொறுத்த அளவில் எந்த ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களோ, ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் 130 கோடி இந்தியர்கள் இந்துக்கள்தான் என்று அதன் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் நேற்று விஜய் சங்கல்ப் சபா என்ற பெயரில் பிரமாண்ட ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 20,000 ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது: இந்த நாட்டில் பிறந்த யாராக இருந்தாலும்.., அவர்கள் எந்த மொழியைப் பேசினாலும்.., எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும்.., எந்த வழிமுறையில் வழிபாடுகளை நடத்துபவர்களாக இருந்தாலும்..., அல்லது கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தாலும் அவர்கள் இந்து தான்.
அந்த வகையில் இந்த நாட்டின் 130 கோடி மக்களும் எங்களைப் பொறுத்த அளவில் இந்துக்கள்தான். இவர்களுக்குள் எந்த வேற்றுமையும் கிடையாது. இவர்கள் அனைவருமே பாரதத்தாயின் புதல்வர்கள்.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில்தான் நமக்குள் பிரித்தாளும் சூழ்ச்சி அறிமுகம் செய்யப்பட்டது. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் நடுவே ஒற்றுமை இருக்க வேண்டும் என்று ரவீந்திரநாத் தாகூர் கூறியதை நான் இப்போது மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்திய சமூகத்தின் இயல்பு என்பது ஒற்றுமையை நோக்கி செல்வதுதான் என்பதுதான் ரவீந்திரநாத் தாகூரின் முடிவான கருத்தாக இருந்தது.
இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் நடுவே ஒரு சில பிரச்சினைகள் இருந்தாலும் கூட, இந்து சமூகம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான திறமை கொண்டது. இந்துக்களின் வழியில் நாட்டை இணைக்க முடியும். இந்துக்கள் மற்றும் நமது கலாச்சாரத்தின் அடிப்படை அனைத்து மக்களையும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக நினைப்பதுதான். இவ்வாறு மோகன் பகவத் பேசியுள்ளார்.