ஹைதராபாத்தில் முன்னாள் சபாநாயகர் கொடேலா சிவபிரசாத் தற்கொலை
Recommended Video
ஹைதராபாத்: ஆந்திர மாநில சட்டசபையின் முன்னாள் சபாநாயகர் கொடேலா சிவபிரசாத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
கொடேலா சிவபிரசாத் ஆந்திர சட்டசபையின் முன்னாள் சபாநாயகராக இருந்தார். ஆந்திரத்தை இரண்டாக பிரித்த போது அமராவதிக்கு சட்டசபை மாற்றப்பட்டது.
அப்போது சட்டசபையில் இருந்த மரச்சாமான்களை தனது வீட்டிற்கும், தனது மகன் வைத்துள்ள மரச்சாமான் கடைக்கு கொண்டு சென்றதாக தற்போது ஆட்சிக்கு வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி புகார் கூறியுள்ளது.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் அவரது வீட்டில் இன்று காலை உணவு சாப்பிட்டு விட்டு அவரது அறைக்கு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் அவரது அறைக்கு சென்று குடும்பத்தினர் பார்த்தனர்.
அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரை மீட்டு ஜூப்ளி ஹில்ஸில் பசவட்டாராகம் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து குடும்ப பிரச்சினையா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இவரின் இறப்பிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒய்எஸ்ஆர் அரசு சிவபிரசாத் மீது 15 வழக்குகளை போட்டதால்தான் மனஉளைச்சலால்தான் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கட்சியினர் குற்றம்சாட்டினர்.