கருணாநிதி போல.. எம்ஜிஆர் போல.. கெட்டப்களுக்கு பெயர் போன.. மாஜி தெலுங்கு தேச எம்பி காலமானார்
முன்னாள் தெலுங்கு தேசம் கட்சி எம்பி சிவபிரசாத் இன்று காலமானார்
ஹைதராபாத்: பல கெட்-அப் போட்டு கலக்கி வந்த தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்பி என்.சிவபிரசாத் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் என்.சிவபிரசாத். இவர் ஒரு நடிகர்.. அரசியல் தலைவரும்கூட! சித்தூர் தொகுதியிலிருந்து 2 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தெலுங்குதேசம் கட்சியில் சிவபிரசாத் அவ்வளவு ஃபேமஸான நபர்.
இவர் எம்பியாக இருந்தபோது, இவரது போராட்டங்கள் ஒவ்வொன்றும் அளவுக்கு அதிகமாக பேசப்பட்டன. அதிலும் ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டதற்கு எதிராக பல போராட்டங்களை இவர் முன்னெடுத்தார். இதற்கு கையாண்ட யுக்தி வித வித கெட்-அப்தான்.
ஹிட்லர்
அதில் ஒரு போராட்டத்தில், சிவப்பிரசாத் தன் காதுகளில் பெரிய பெரிய தாமரை பூக்களை வைத்துக் கொண்டு வந்தார். திடீரென ஹிட்லர் வேடம் போடுவார், திடீரென சுதந்திர போராட்ட தியாகி போல கெட்-அப் சேஞ்ச் செய்வார். இந்த கெட்-அப் எல்லாம் மாநிலத்துக்குள்ளேயே பேசப்பட்டவை.
வித வித கெட்-அப்
ஆனால், ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி நடந்த நாடாளுமன்றத்தின் முன்பே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போதுதான் இவரது போராட்டத்தை நாடே வியந்து பார்த்தது. ஏனெனில் சிவபிரசாத், ஒவ்வொரு நாளும், நாரதர், நாட்டுப்புற கலைஞர், ஆடுமாடு மேய்ப்பவர், பரசுராமன் என புது புது தோற்றங்களில் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
அமளி
இப்படித்தான், போன டிசம்பர் மாதம்.. பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வந்தது. பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தன.. அந்த சமயத்தில் சிவபிரசாத் பாராளுமன்றத்துக்குள் நுழைந்ததுமே அங்கிருந்த மொத்த கூட்டமும் ஆஃப் ஆனது!
மஞ்சள் துண்டு
காரணம்,கருப்பு கண்ணாடி, மஞ்சள் துண்டு சகிதம் வீல் சேரில் கருணாநிதி கெட்டப்பில் இருந்தார் சிவபிரசாத். அவரை ஒரு வீல்சேரில் உட்கார வைத்து ஒருவர் தள்ளி கொண்டு வந்தார். சேரில் உட்கார்ந்த "கருணாநிதி" ஒரு கையை தூக்கி காட்டியபடியே வந்தார்.
கருணாநிதி
சிவபிரசாத் கருணாநிதி கெட்-அப்பில் வந்ததற்கு காரணம், பாஜகவுக்கு எதிராக ஒன்று சேரும் அணியை திரட்டி சந்திரபாபு நாயுடு முயற்சி மேற்கொண்டிருந்த சமயம் அது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலினும் ஆதரவு தெரிவித்து, இதற்கான கூட்டங்களில் பங்கெடுத்தும் வந்தார். அதனால்தான் அப்போது சிவபிரசாத் கருணாநிதி கெட்டப்பில் வந்திருந்தார்.
காலமானார்
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இவருக்கு உடம்பு சரியில்லை. நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதனால் சென்னையிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரை நேற்றுகூட கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து விசாரித்து விட்டு வந்தார். ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி சிவபிரசாத் உயிரிழந்துள்ளது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை தந்துள்ளது.
இனி... போராட்டம், ஆர்ப்பாட்டம் என்றாலே அந்த மாநில மக்கள் சிவபிரசாத்தைதான் மனதில் நினைத்து கொள்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை!