காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி காலமானார்
ஹைதராபாத்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி காலமானார். அவருக்கு வயது 77 ஆகும்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் ஜெய்பால் ரெட்டி. இவர் முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் ஹைதராபாத் நகரில் உள்ள கச்சிபவுலி பகுதியில் அமைந்த ஆசிய கேஸ்டிரோஎன்டிராலஜி மையத்தில் சிகிக்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து 1.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. காலமான ஜெய்பால் ரெட்டிக்கு மனைவியும் இரட்டையர்களான மகனும் மகளும் உள்ளனர்.
மறைந்த ரெட்டியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 1942-ஆம் ஆண்டு ஜெய்ப்பால் ரெட்டி பிறந்தார். அவர் ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக இருந்துள்ளார். அதன் பின்னர் அரசியலில் இறங்கிய அவர் 1970ஆம் ஆண்டில் காங்கிரஸ் எம்எல்ஏவானார்.
பின்னர் ஜனதா தளம் கட்சியில் இணைந்த அவர் ஐகே குஜ்ரால் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அது போல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலும் அமைச்சர் பதவியை வகித்துள்ளார்.